வெறும் கையில் முழம் போடவில்லை... ஸ்லீப்பர் செல் குறித்து டிடிவி தினகரன் பேட்டி
நாங்கள் வெறும் கையில் முழம் போடவில்லை என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
சென்னை: நாங்கள் யாரும் வெறும் கையில் முழம் போடவில்லை. தக்க நேரத்தில் எங்கள் ஆதரவாளர்கள் வெளியே வருவர் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
சசிகலாவின் கணவர் நடராஜன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பார்த்துக் கொள்வதற்காக பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்தார்.
இவரை அமைச்சர்கள் சந்திப்பார்களா என்ற கேள்வி அவர் வெளியே வருவதற்கு முன்னரே சூழ்ந்து கொண்டது. இதற்கு சில எம்எல்ஏக்கள் பதில் அளிக்காமல் ஓட்டம் பிடித்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது.
ஜெயலலிதாவின் பிள்ளை
இதுகுறித்து கூட்டுறவு அமைச்சர் செல்லூர் ராஜூ ஒரு கருத்தை கூறு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அவர் கூறுகையில், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக ஆட்சி அமைய பாடுபட்டவர் சசிகலா. ஆனால் என்னுடைய விருப்பு வெறுப்புகளை அடக்கிக்கொண்டு ஜெயலலிதாவின் பிள்ளையாக இருக்கிறேன் என்றார்.
ஸ்லீப்பர் செல்கள் உண்டு
மேலும் இன்றைய சூழ்நிலையில் என் கருத்துகள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் துணை முதல்வர் ஓபிஎஸ்க்கும் பாதகமாக இருக்கக் கூடாது என்றும் கூறினார். எடப்பாடி பழனிச்சாமிக்கும், தினகரனுக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டு வந்த போது, அந்த அணியில் ஸ்லீப்பர் செல்கள் இருப்பதாக தெரிவித்தனர்.
தினகரன் வரவேற்பு
ஆனால் இதை எடப்பாடி தரப்பினர் மறுத்தனர். இந்நிலையில் சசிகலாவுக்கு ஆதரவாக செல்லூர் ராஜூ கூறிய கருத்தால் தினகரன் தரப்பினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து டிடிவி தினகரன் கூறுகையில் சசிகலா குறித்து செல்லூர் ராஜூ கூறிய கருத்து வரவேற்கத்தக்கது. நாங்கள் வெறும் கையில் முழம் போடவில்லை. செல்லூர் ராஜூவை போல் ஸ்லீப்பர் செல்களாகிய எங்கள் ஆதரவாளர்கள் யார் என்பது தகுந்த நேரத்தில் வெளிப்படுவர்.
தினகரன் கருத்து
நம்பிக்கை வாக்கெடுப்பை எடப்பாடி பழனிச்சாமி அரசு இனியும் தள்ளிப் போட முடியாது. 18 எம்எல்ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது தவறு என்று கூறியுள்ளார். இதேபோல் செல்லூர் ராஜூ கூறிய கருத்தை தினகரன் ஆதரவாளர் சி.ஆர்.சரஸ்வதியும் வரவேற்றுள்ளார்.
நான் ஸ்லீப்பர் செல் இல்லை
ஆனால் செல்லூர் ராஜூ திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் நான் ஸ்லீப்பர் செல் இல்லை. தினகரன் தன்னை ஸ்லீப்பர் செல் என்று கூறியது தவறு. சசிகலா குறித்து நான் கூறிய கருத்து பெரிதாக்கப்பட்டுவிட்டதாக கூறி கண்கலங்கினார்.