அதிமுக பொருட்டல்ல, திமுகவுடன் தான் நேரடி போட்டி... நாஞ்சில்சம்பத் பொளேர் பேட்டி! Exclusive
அதிமுக ஒரு பொருட்டல்ல ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுகவுடன் தான் தினகரனுக்கு நேரடி போட்டி என்று தினகரன் அணியைச் சேர்ந்த நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை : அதிமுக ஒரு பொருட்டல்ல ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுகவுடன் தான் தினகரனுக்கு நேரடி போட்டி என்று தினகரன் அணியைச் சேர்ந்த நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
ஆர்கே நகர் இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த தொகுதியில் 6 முனை போட்டி உருவாகியுள்ளது. இந்நிலையில் ஆர்கே நகர் இடைத்தேர்தல் குறித்து தினகரனின் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் தமிழ் ஒன் இந்தியாவிற்கு அளித்த பிரத்யேக பேட்டி விவரங்கள்:
டிடிவி தினகரன் ஆர்கேநகர் தொகுதி மக்களின் அன்பையும், ஆதரவைப் பெற்றுள்ளார். தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே இடைத்தேர்தலுக்கு தேர்தல் அறிக்கை தயாரித்தது கிடையாது. ஆனால் ஆர்.கே நகர் தொகுதிக்கென்று தனியான தேர்தல் அறிக்கையை தயாரித்து அதை வைத்து தான் மக்களிடம் வாக்குகளை சேகரித்தோம்.
56 ஆயிரம் பேருக்கு வீடுகள்
அந்த தேர்தல் அறிக்கையில் இந்த தொகுதியில் இருக்கும் எல்லா தரப்பு மக்களின் கோரிக்கைகள் இடம்பெற்றிருந்தன. ஆர் கே நகரில் 56 ஆயிரம் பேர் தங்களுக்கு வீடு கட்டித் தர வேண்டும் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிடம் மனு அளித்திருந்தனர். அதை கணக்கில் எடுத்துக் கொண்டு 56 ஆயிரம் பேருக்கும் வீடுகள் கட்டித் தரப்படும் என்று டிடிவி தினகரன் கடந்த ஏப்ரல் மாதம் தன்னுடைய தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
மீண்டும் களத்தில் தினகரன்
ஆர்கே நகர் தொகுதி மக்களின் சுக துக்கங்களை தீர்மானிக்கிற தேர்தல் அறிக்கையை தந்த ஒரே வேட்பாளர் டிடிவி தினகரன். அவருக்கு இனி அறிமுகம் தேவையில்லை, அவர் மீண்டும் களத்தில் இருக்கிறார். தினகரன் இன்று வஞ்சிக்கப்பட்டவர்களின், நிராகரிக்கப்பட்டவர்களின் சார்பாக களத்தில் நிற்கிறார்.
தினகரன் வெற்றி நிச்சயம்
தினகரன் ஆதிக்க வல்லூறுகளால் தொடர்ந்து தாக்கப்படும் நிலையில், ஏகாதிபத்தியத்தை அடக்குவதற்காக தேர்தல் களத்தில் நிற்கிறார். எத்தனையோ வழக்குளை சந்தித்துவிட்டுத் தான் அவர் வருகிறார். எனவே தினகரனை காப்பாற்றுவதன் மூலம் தாங்கள் காப்பாற்றப்படுவோம் என்ற முடிவிற்கு ஆர்கே நகர் தொகுதி மக்கள் வந்துவிட்டனர். எனவே தினகரன் நிச்சயம் வெற்றி பெறுவார்.
அதிமுக பொருட்டல்ல
தினகரனுக்கு திமுகவிற்கும் தான் நேரடி போட்டி, அதிமுக எங்களுக்கு ஒரு பொருட்டேயல்ல. இரட்டை இலை சின்னத்தை மீட்க டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம், நிச்சயம் சின்னம் எங்களுக்கு கிடைக்கும்.
பதவியாசையால் ஓடினார்கள்
பதவி ஆசையில் சில எம்பிக்கள் எதிர் அணிக்கு சென்றிருக்கின்றனர், அவர்களை எண்ணி நாங்கள் கவலைப்படவில்லை. அந்த அணியில் இருந்தும் எந்த எம்எல்ஏக்களும் வரமாட்டார்கள், நாங்கள் அவர்களை எதிர்பார்க்கவும் இல்லை என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.