தகுதிநீக்கத்தை எதிர்த்து 18 எம்எல்ஏக்கள் ஹைகோர்ட்டில் மனு - நாளையே விசாரணை
தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் 18 பேர் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர்.
சென்னை: தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் 18 பேர் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர். அவசர வழக்காக விசாரிக்கவும் அவர்கள் முறையிட்டுள்ளனர். தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு முன் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் இந்த வழக்கு தொடர்பாக முறையிட்டார்.
மனுவாக தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு நாளை ஸ்டாலின் தாக்கல் செய்துள்ள மனுவுடன் சேர்த்து விசாரணைக்கு வரும் என்று கூறப்படுகிறது.
ரிசார்ட்டில் எம்எல்ஏக்கள்
அரசு கொறடா ராஜேந்திரன் பரிந்துரையின் பேரில் 19 பேருக்கும் விளக்கம் கேட்டு பேரவைத்தலைவர் பி.தனபால் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதில், கம்பம் தொகுதி எம்எல்ஏ எஸ்டிகே ஜக்கையன் முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவு அளித்தார். சபாநாயகர் தனபாலிடம் விளக்கமும் அளித்தார். மற்ற 18 பேரும் குடகில் உள்ள ரிசார்ட்டில் தங்கியுள்ளனர்.
18 பேர் தகுதி நீக்கம்
18 பேரும் ஆஜராகி நேரில் விளக்கம் அளிக்க வேண்டும். ஆனால் சபாநாயகர் அளித்த கெடு முடிந்தும் எம்எல்ஏக்கள் விளக்கம் அளிக்காத காரணத்தினால் 18 எம்எல்ஏக்களை நேற்று தகுதி நீக்கம் செய்தார் சபாநாயகர் தனபால்.
18 எம்எல்ஏக்கள்
சபாநாயகர் தனபாலின் ஆணைப்படி, பூந்தமல்லி தொகுதி டி.ஏ.ஏழுமலை பெரம்பூர் தொகுதி பி.வெற்றிவேல் திருப்போரூர் மு.கோதண்டபாணி, சோளிங்கர் என்.ஜி.பார்த்திபன், குடியாத்தம் தொகுதி சி.ஜெயந்தி பத்மநாபன், ஆம்பூர் தொகுதி ஆர்.பாலசுப்பிரமணி, பாப்பிரெட்டி பட்டி பெ.பழனியப்பன், அரூர் ஆர்.முருகன், நிலக்கோட்டை ஆர்.தங்கதுரை, அரவக்குறிச்சி வி.செந்தில்பாலாஜி, தஞ்சாவூர் எம்.ரெங்கசாமி,மானாமதுரை சோ.மாரியப்பன் கென்னடி, ஆண்டிபட்டி தங்கதமிழ்செல்வன், பெரியகுளம் கா.கதிர்காமு, சாத்தூர் எஸ்.ஜி.சுப்பிரமணியன், பரமக்குடி எஸ்.முத்தையா, விளாத்திக்குளம் கு.உமா மகேஸ்வரி, ஒட்டப்பிடாரம் ஆர்.சுந்தர்ராஜ் ஆகியோர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
வெற்றிவேல் கொதிப்பு
இதனிடையே சபாநாயகர் தகுதி நீக்கம் செய்வதை சட்டப்படி எதிர்கொள்வோம் என்று வெற்றிவேல் எம்எல்ஏ கூறினார். நாங்கள் சட்டசபையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்போம் என்றும் கொறாடா உத்தரவு எல்லா இடத்திற்கும் பொருந்தாது என்றார்.
தினகரன் பேட்டி
அதே போல குறுக்கு வழியில் பெரும்பான்மையை காட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சபாநாயகர் தனபால் நடவடிக்கையை எதிர்த்து வழக்கு தொடர்வோம் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
உயர்நீதிமன்றத்தில் முறையீடு
அதன்படி டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் 18 பேர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. தாங்கள் கட்சி தாவவில்லை என்றும் முறையிட்டுள்ளனர். அவசர வழக்காக விசாரிக்கவும் அவர்கள் முறையிட்டுள்ளனர். அதிமுகவில் இருந்து விலகவோ,வேறு கட்சியில் சேரவோ இல்லை என்று தங்களின் மனுவில் கூறியுள்ளனர்.
மனு விசாரணை
தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு முன் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் இந்த வழக்கு தொடர்பாக முறையிட்டார். மனுவாக தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு நாளை ஸ்டாலின் தாக்கல் செய்துள்ள மனுவுடன் சேர்த்து விசாரணைக்கு வரும் என்று கூறப்படுகிறது.