மதுரை முனிச்சாலையை பீதிக்குள்ளாக்கிய "டியூப்லைட்"!
மதுரை: மதுரையில் ஒரு குப்பைத் தொட்டியில் வெடித்துச் சிதறிய டியூப் லைட்டால் பெரும் பதட்டம் ஏற்பட்டு விட்டது.
முனிச்சாலை பகுதியில் உள்ள ஒரு குப்பைத் தொட்டியில் நேற்று திடீரென பலத்த சத்தத்துடன் ஏதோ ஒரு பொருள் வெடித்துச் சிதறியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. வெடித்தது வெடிகுண்டு என்றும் தகவல் பரவியது. இதையடுத்து போலீஸார் விரைந்து வந்தனர். பொதுமக்கள் அந்தக் குப்பைத் தொட்டிப் பகுதியிலிருந்து அலறியடித்து ஓடினர்.

மோப்ப நாய்களை வரவழைத்த போலீஸார் குப்பைத் தொட்டியை கிளறிப் பார்த்து ஆய்வு நடத்தினர். வெடிகுண்டு நிபுணர்களும் விரைந்து வந்தனர். இந்த சோதனையில், வெடித்தது சாதாரண டியூப்லைட்தான் என்றும், வெடிகுண்டு இல்லை என்றும் தெரிய வந்தது. இந்த சம்பவத்தால் முனிச்சாலை மட்டுமல்லாமல் மதுரையிலும் பரபரப்பு ஏற்பட்டு விட்டது.
சில மாதங்களுக்கு முன்பு மதுரையில் குப்பைத் தொட்டியில் ஏராளமான நாட்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. விசாரணையில் வரிச்சியூர் செல்வம் பெருசு அழகர் என்ற இரு ரவுடிக் கும்பல்களுக்கிடையே இருந்து வந்த மோதல் காரணமாக பயன்படுத்த இவை தயாரித்துக் கொண்டு வரப்பட்டவை என்று தெரிய வந்தது.
மேலும் அடிக்கடி மதுரையில் நாட்டு வெடிகுண்டுகள் சிக்கி வந்த நிலையில் நேற்று குப்பைத் தொட்டியில் டியூப் லைட் வெடித்ததால் மக்கள் பெரும் பீதியடைந்து விட்டனர்.












Click it and Unblock the Notifications