விடாமல் வெளுத்த மழை... தீவாக மாறிய தூத்துக்குடி - விஷ ஜந்துக்கள் படையெடுப்பால் மக்கள் பீதி
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் விடிய விடிய கனமழை பெய்ததில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதில் விஷ ஜந்துக்கள் வீடுகளுக்குள் படையெடுத்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. தொடர் மழை காரணமாக ஏரி, குளங்கள் நிரம்பி வழிகின்றன. தூத்துக்குடி எட்டயபுரம் ரோட்டில் உள்ள ஆதிபராசக்தி நகர், ஜெபா நகர், முத்தம்மாள் காலனி, கவுசிங் போர்டு, பழைய ஸ்டேட் பாங்க் காலனி, மடத்தூர், முருகேசன் நகர், தபால் தந்தி காலனி, பிரையன்ட் நகர் 3வது தெரு, முத்தையாபுரம், முள்ளக்காடு, ராஜீவ் நகர் வடக்கு பகுதி, ஜேஎஸ் நகர், சுந்தர் நகர், ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.
இதையடுத்து வெள்ள நீரை வெளியேற்ற கோரி தூத்துக்குடி- எட்டயபுரம் நெடுஞ்சாலையிலும், பாளை மெயின் ரோட்டிலும் பொதுமக்கள் சாலை மறியல் செய்து வருகின்றனர். சம்பவ இடத்துக்கு தினமும் செல்லும் போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். தொடர் மழையால் தூத்துக்குடி குட்டி தீவாக மாறி வருகிறது.
தண்ணீர் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட வருவாய் துறை அதிகாரிகள் பாதிப்பு இல்லை என்று ஆட்சி மேலிடத்திற்கு செய்தி அனுப்பியதால் நிவாரண நடவடிக்கைகள் அறவே இல்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் மழைக்கு இதுவரை 423 வீடுகள் இடிந்துள்ளன.
மாவட்டத்தில் இந்த ஆண்டு, ஆண்டு சராசரி மழை அளவான 661 மிமீட்டரை விட அதிகமான மழை பெய்துள்ளது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலான குளங்கள் 50 சதவீதம் நிரம்பி விட்டன.
இந்த நிலையில் வெள்ள நீர் சூழ்ந்த பகுதியில் பாம்பு, பூரான் உள்ளிட்ட விஷ சந்துகள் படையெடுத்து வர தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் பீதியில் உறைந்து போய் காணப்படுகின்றனர்.
நெல்லை மாவட்டததில் கனமழை நீடிப்பு - பொதுமக்கள் தவிப்பு
இதேபோல நெல்லை மாவட்டத்திலும் கன மழை நீடிக்கிறது. நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை முதல் வானம் மேக மூட்டமாக இருந்தது. இந்த நிலையில் இரவு முழுவதும் விடிய விடிய மழை கொட்டி தீர்ந்தது.
அணைப்பகுதியை பொறுத்தவரை மணிமுத்தாறு அணை பகுதியில் மட்டும் நல்ல மழை பெய்துள்ளது. பாபநாசம் அணையி்ன் நீர்மட்டம் 109.15 அடியாக உள்ளது. அணைப்பகுதியில் 14 மிமீ மழை பதிவாகியு்ள்ளது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 78.80 அடியாக உயர்ந்துள்ளது. அணைப்பகுதியில் 32 மிமீ மழை பதிவாகியுள்ளது.
சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 23.16 அடியாக உயர்ந்துள்ளது. அணைப்பகுதியில் பதிவாகியுள்ள மழை விவரம் வருமாறு,, கடனா நதி 85, ராமநதி 82, கருப்பா நதி 69.92, குண்டாறு 36.10, வடக்கு பச்சையாறு 36, நம்பியாறு 10, கொடுமுடியாறு 45, அடவிநயினார் 131 என பெய்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக அம்பையிலல் 39.60 மிமீ மழை பதிவாகியுள்ளது.
மற்ற இடங்களில் பெய்த மழை அளவு ஆலங்குளம் 32.4, ஆய்குடி 10.2, பாபநாசம் 14, நாங்குனேரி 1.65, பாளை 3, செங்கோட்டை 3, சங்கரன்கோவில் 5, சிவகரி 1, தென்காசி 1, நெல்லை 2 என மழை பதிவாகியுள்ளது. இந்த மழை காரணமாக பலரது வீடுகள் இடியும் நிலையில் உள்ளது.