தூத்துக்குடி கூட்டம் தேமுதிகவுக்கு வலு சேர்க்கும்... கொ.ப.செ. சந்திரகுமார்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் கூடும் தொண்டர்களின் கூட்டம் தேமுதிகவின் வளர்ச்சிக்கு வலு சேர்க்கும் என்று தேமுதிகவின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் சந்திரகுமார் எம்.எல்.ஏ., கூறினார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில் கட்சியின் 9வது ஆண்டு துவக்கவிழா தூத்துக்குடி புதுக்கிராமத்தில் கொடியேற்றியும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகராஜா தலைமை வகித்தார்.
விழாவில், தேமுதிகவின் மாநில கொள்கைபரப்பு செயலாளர் சந்திரகுமார் எம்.எல்.ஏ., சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கட்சிக் கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், கட்சியின் 9வது ஆண்டு துவக்கவிழாவை கொண்டாடுவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்.
தமிழகத்தில் எத்தனை எத்தனையோ அரசியல் இயக்கங்கள் இருந்தாலும் தனிமனிதனால் உருவாக்கப்பட்ட தேமுதிக இயக்கம் இந்த அளவிற்கு வளர்ச்சி கண்டு மாபெரும் சக்தியாக உருவாகியுள்ளது மிகப்பெரும் சாதனையாகும்.
9ம் ஆண்டு துவக்கவிழாவை தென்தமிழகத்தில் கொண்டாடவேண்டும் என்று முடிவு செய்த தேமுதிக தலைவர் கேப்டன் தூத்துக்குடியை தேர்வு செய்துள்ளார். தலைவரின் விருப்பப்படி தூத்துக்குடியில் வரும் 22ம் தேதி தேமுதிகவின் 9ம் ஆண்டு துவக்கவிழாவிற்கான மாபெரும் பொதுக்கூட்டம் நடக்கிறது.
தூத்துக்குடியில் நடைபெறும் இந்த பொதுக்கூட்டம் தேமுதிகவின் வளர்ச்சிக்கு ஒரு மைல்கல்லாக அமையும். தென்தமிழகமான தூத்துக்குடியில் நடைபெறும் தேமுதிகவின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் லட்சக்கணக்கான தொண்டர்களின் கூட்டம் வரும் பாராளுமன்ற தேர்தலில் தேமுதிகவின் வளர்ச்சிக்கு வலுசேர்க்கும் வகையில் அமையும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
தென்தமிழகத்தையும், தூத்துக்குடி மாவட்டத்தையும் முன்னிறுத்தி நடைபெறும் இந்த மாபெரும் பொதுக்கூட்டம் தமிழக அரசியலில் மாபெரும் மாற்றத்தை உருவாக்கும் என்பதில் மாற்றுக்கருத்து ஏதும் இல்லை என்றார்.