ராமநாதபுரம் அருகே வெடிகுண்டு வீசி பிரபல ரவுடி படுகொலை! சட்டம்-ஒழுங்கின் மற்றொரு சரிவு
ராமநாதபுரம்: சாயல்குடி அருகே வெடிகுண்டு வீசி பிரபல ரவுடி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ராமநாதபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடியை சேர்ந்த பட்டுராஜா மீது பல்வேறு வழக்குகள் நிலுவையிலுள்ளதால் அவரை போலீசார் ரவுடி பட்டியலில் சேர்த்திருந்தனர். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே பட்டு ராஜா இன்று கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

வெடிகுண்டுகளை வீசியும், அதன்பிறகு அரிவாளால் வெட்டியும் இந்த கொலை நடந்துள்ளது என்று போலீசார் தெரிவித்தனர். கொலையாளிகள் யார் என்பது அடையாளம் தெரியவில்லை. முன்விரோதம் காரணமாக, எதிர் தரப்பினர் பட்டு ராஜாவை கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சென்னையில் இன்போசிஸ் ஊழியர் சுவாதி உட்பட, ஒரே நாளில் 6 பெண்கள் படுகொலை செய்யப்பட்டது மட்டுமின்றி, 2 வக்கீல்கள் வெட்டி கொல்லப்பட்டது உள்ளிட்ட பல்வேறு கொலைகள் சமீப காலத்தில் நடந்துள்ளன.
காஞ்சிபுரம் சிங்கபெருமாள் கோயில் அருகே தொழிலதிபர் திருமாறன் என்பவர் கார் மீது நேற்று கையெறி குண்டுகள் வீசப்பட்டன. இதுதொடர்பாக இரு குற்றவாளிகள் இன்று நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர். இந்நிலையில் ராமநாதபுரம் அருகே, வெடிகுண்டு வீசி ரவுடி கொல்லப்பட்டுள்ளார். அடுத்தடுத்த சம்பவங்களை பார்க்கும்போது, காவல்துறை சட்டம்-ஒழுங்கை காப்பதில் சுணக்கம் காட்டுகிறதோ என்று சாமானியர்களையும் யோசிக்க வைக்கிறது.












Click it and Unblock the Notifications