குற்றால அருவியில் அடித்து சென்ற 4 வயது சிறுமி! தெய்வம் போல் மாறிய கார் டிரைவர்! குவியும் பாராட்டுகள்
தென்காசி: பழைய குற்றால அருவியில் குழந்தை ஒன்று நீரில் அடித்து செல்லப்பட்டபோது அந்த குழந்தையை இளைஞர் ஒருவர் துணிச்சலாக காப்பாற்றியுள்ளார். லேசான காயம் அடைந்த சிறுமி தென்காசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் குடும்பத்துடன் பழைய குற்றால அருவிக்கு நேற்று வந்தார். இவரது 4 வயது மகள் ஹரிணியை அருவிக்கரையில் அமர வைத்துவிட்டு பெற்றோர் குளித்துள்ளனர்.
பின்னர் அருவியின் முன்புறமுள்ள சிறிய தடாகத்தில் சிறுமி இறங்கினார். தடாகத்திலிருந்து ஆற்றில் தண்ணீர் விழுவதற்கு அமைக்கப்பட்டிருந்த குழாய் போன்ற ஓடை வழியாக சிறுமி தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். சுமார் 50 அடி பள்ளத்தில் தூக்கிவீசப்பட்டார். இதனால் சிறுமி அலறி கூச்சலிட்டார். இதை பார்த்து பெற்றோரும் கூச்சலிட்டனர்.

துணிச்சல்
உடனே அங்கு வந்த இளைஞர் ஒருவர் துணிச்சலாக பாறைகள் நிறைய ஆற்றின் பள்ளத்தில் வேகமாக இறங்கி சென்று ஹரிணியை பத்திரமாக மீட்டெடுத்தார். இதனால் லேசான காயத்துடன் சிறுமி உயிர் தப்பினார். சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்த போது அழுதுக் கொண்டிருந்த பெற்றோர் சிறுமிக்கு முத்தம் கொடுத்து மகிழ்ந்தனர். அந்த இளைஞருக்கும் நன்றியை தெரிவித்தனர்.

சிறுமி
சிறுமியை காப்பாற்றிய இளைஞர் விஜயகுமார், இவர் விளாத்திகுளம் போலீஸ் லைன் தெருவைச் சேர்ந்தவர். 27 வயதாகும் இவர் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று சவாரியை ஏற்றிக் கொண்டு பழைய குற்றாலம் சென்றுள்ளார். அங்கு காலை 10 மணிக்கு காரை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு குளிக்க சென்றுள்ளார்.

தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட ஹரிணி
அப்போது ஹரிணி தண்ணீரில் அடித்து செல்லப்படுவதை பார்த்து ஆற்றில் இறங்கி காப்பாற்றியுள்ளார். சிறுமி அழுது கொண்டே இருந்த நிலையில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க தென்காசி தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். விஜயகுமாரின் செயல்கள் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. இவருக்கு பாராட்டுகள் குவிகின்றன.

மழை காரணமாக அதிக நீர்
தென் மாவட்டங்களில் மழை காரணமாக பழைய குற்றாலம், ஐந்தருவிகள் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் அவ்வப்போது அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சில மணி நேரத்தில் தண்ணீர் குறைந்தவுடன் தடை நீக்கப்படுகிறது. இப்படியான சமயத்தில் இது போன்ற விபத்துகளும் நடைபெறுகின்றன. பொதுமக்கள் சுற்றுலா தலங்களுக்கு வந்து மகிழ்ச்சியோடு திரும்பி செல்ல வேண்டுமே தவிர உறவுகளையோ உடைமைகளையோ இழந்து சோகத்துடன் செல்லும் நிலை ஏற்பட கூடாது என்பதுதான் அனைவரின் கோரிக்கையாக உள்ளது.












Click it and Unblock the Notifications