வன்முறையில் குதித்த கர்நாடகம்.. பொறுமை காத்த தமிழகம்.. சுப்ரீம் கோர்ட் கொடுத்த குட்டு!
சென்னை: கர்நாடக பதிவெண் கொண்ட வாகனத்தைத் தடுத்து நிறுத்தி அதன் டிரைவரை தாக்கி மண்டியிட்டு அமரச் செய்து காவிரி தமிழ்நாட்டுக்கே என்று சொல்ல வைத்துள்ளனர் தமிழர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள். கண்ணுக்குக் கண், பழிக்குப் பழி என்ற ரீதியில் நடந்துள்ள இந்த சம்பவத்தால் தமிழகத்திற்கு எந்த வகையான பெருமை கிடைக்கும் என்று தெரியவில்லை. நிச்சயம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய தாக்குதல் இது.
அதேசமயம், கர்நாடகத்தில் நடந்த வன்முறை, போராட்டங்களால் இன்று சுப்ரீம் கோர்ட்டில் அந்த மாநில அரசு கடுமையான கண்டனத்தை சம்பாதித்துள்ளது என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். வினை விதைத்தவன் வினை அறுப்பான் கதைதான் இது.
பெங்களூரைச் சேர்ந்த தமிழ் இளைஞர் சந்தோஷ் தீனா என்ற மாணவரை ஒரு கும்பல் மிக மோசமாக தாக்கிய அநாகரீகச் செயல் அனைவரையும் அதிர வைத்தது. நாமெல்லாம் இந்தியர்கள்தானா என்ற சந்தேகத்தை தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் மனதில் எழுப்பி விட்டது. நாகரீக மனது கொண்ட அனைவரையும் இது வேதனை அடையச் செய்துள்ளது.

ராமேஸ்வரம் அதிர்ச்சி
ஆனால் கிட்டத்தட்ட அதேபோன்ற ஒரு செயலில் தமிழகத்தைச் சேர்ந்த சிலர் ராமேஸ்வரத்தில் ஈடுபட்டது இன்னொரு அதிர்ச்சியாக வந்துள்ளது. எப்படி சந்தோஷ் தீனாவின் குடும்பத்தினருக்கு, அவர் மீதான தாக்குதல் மன வேதனையையும், வலியையும் கஷ்டத்தையும் கொடுத்திருக்குமோ அதே போலத்தான் ராமேஸ்வரத்தில் தாக்குதலுக்குள்ளான கர்நாடக டிரைவரின் குடும்பத்தினருக்கும் இருக்கும் என்பதை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மறந்து விட்டது வருத்தத்திற்குரியது.

டிரைவருக்கு அடி உதை
ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா வந்த வாகனங்களை தமிழக வாழ்வுரிமை கட்சியினர் மற்றும் தமிழ் தேசிய முன்னணி கட்சியினர் அடித்து நொறுக்கினர். ராமேஸ்வரம் ஜே.ஜே.நகரில் கர்நாடக பதிவு எண் கொண்ட வாகனங்கள் உடைக்கப்பட்டது. கர்நாடக வாகனத்தை ஓட்டிவந்த டிரைவரை அடித்து, உதைத்து, மண்டியிடவைத்து, காவிரி தமிழ்நாட்டுக்கே என்று சொல்ல வைத்தனர்.

தாக்குவோம்
வாகனங்களை அடித்து நொறுக்கியவர்களில் ஒருவரான முருகானந்த் என்பவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகாவில் இருக்கும் தமிழர்களையும், தமிழ்நாட்டு வாகனங்களையும், அங்கிருக்கும் சொத்துக்களையும் அங்கிருக்கும் கன்னட வெறியர்கள் அடித்து நொறுக்கும் வேலையை தொடர்ந்து செய்தால் வாகனங்களை மட்டுமல்லாது தமிழகத்தில் நுழையும் கன்னடர்களையும் அடிப்போம் என்றார்.

இது சரியா?
நிச்சயம் இது தவறு. பழிக்குப் பழி அடிக்கு அடி என்று நாமும் கிளம்பினால், நமக்கும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்க முடியும்.. எதிர்ப்பைக் காட்ட வேண்டும், கண்டிக்க வேண்டும் .. அதில் சந்தேகமில்லை. ஆனால் ஜனநாயக வழியில் அதைச் செய்யலாம். அப்படித்தான் செய்ய வேண்டும். தமிழர்கள் அறிவு முதிர்ச்சி கொண்டவர்கள் என்பதை மற்றவர்களுக்கு எடுத்துக் காட்ட இது நல்ல தருணம்.

நம்பிக்கையுடன் இருப்போம்
அதை விட முக்கியம்.. இது 1991 அல்ல.. 2016.. அதையும் விட முக்கியமானது உச்சநீதிமன்றம் பார்த்துக் கொண்டிருக்கிறது.. 1991 போல இந்த முறை அது மவுனமாக இருக்காது என்ற நம்பிக்கையுடன் அனைவரும் இருக்க வேண்டும். காவிரி முக்கியம்தான், அதை விட ஒற்றுமை மிக மிக முக்கியம். மறக்காமல் இருப்போம். மனிதத்துடன் நடந்து கொள்வோம்.

குட்டு விழுந்ததைப் பார்த்தீர்களா?
இன்று கர்நாடகத்திற்கு சுப்ரீம் கோர்ட்டில் கடும் குட்டு விழுந்துள்ளது. மக்கள் போராட்டம் நடத்துகிறார்கள் என்று கூறிக் கொண்டிருக்காதீர்கள். அதைக் காரணம் காட்டி தண்ணீர் விட மறுக்காதீர்கள் என்று சுப்ரீம் கோர்ட் காட்டமாக கூறியுள்ளது. அதை விட தமிழகத்திற்குக் கூடுதல் நீரும் கிடைக்கப் போகிறது (பெரிய அளவில் இல்லாவிட்டாலும் கூட) இது தமிழக மக்கள் இது நாள் வரை காத்த அமைதிக்கு கிடைத்த வெற்றி, கர்நாடகத்தில் சிலர் வன்முறையில் கையில் எடுத்ததால் அவர்களுக்கு வந்த பாதகம் இது.
இதையும் மனதில் வைப்போம்.. நாம் அமைதி விரும்பிகள் என்பதை கர்வத்துடன் நிரூபிப்போம்!












Click it and Unblock the Notifications