திருச்சி சிறையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும் ஈழத் தமிழர்களை விடுதலை செய்க: தி. வேல்முருகன்
சென்னை: திருச்சி முகாமில் உண்ணாவிரதப் போராட்டத்தும் ஈழத் தமிழர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள முகாம் சிறையில் தொடர்புடைய ஈழத் தமிழர்கள் மற்றும் மலேசிய தமிழர் உட்பட 31 பேர் உள்ளனர். இதில் ஈழத் தமிழர்கள் 26 பேர் தங்களை முகாமில் இருந்து விடுவிக்க கோரியும் வழக்குளை சட்டப்படி வெளியில் இருந்து நடத்தி கொள்வதாக கூறியும் கடந்த 15-ந் தேதி முதல் உண்ணாநிலைப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இவர்களில் 25 பேர் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தங்களது உயிரைப் போக்கிக் கொள்ளவும் துணிந்திருக்கிறார்கள் எனில் அவர்களது துயரத்தையும் வலியும் மிகக் கொடூரமானது என்பதை தமிழக அரசு உணர்ந்து கொள்ள வேண்டும்.
அத்துடன் தங்களது விடுதலைக்காக போராடினார்கள் என்ற ஒரே காரணத்துக்காக ஈழ ஏதிலியர் ஒருங்கிணைப்பாளரான ஈழ நேரு, கருணைராஜா ஆகியோர் மீண்டும் கைது செய்யப்பட்டு அகதிகளை போராட தூண்டியது, தற்கொலைக்கு தூண்டியது என 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்திருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.
இதே இந்தியாவில் இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் தொடர்பே இல்லாத திபெத்திய அகதிகள் ஒரு தனிநாட்டுக்கான அத்தனை சுதந்திரத்துடன் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் தமிழ்நாட்டின் 7 கோடி மக்களுடன் தொப்புள் கொடி உறவு கொண்ட ஈழத் தமிழர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் அகதி முகாம்களோ மிக மோசமான திறந்தவெளி சிறைச்சாலைகளாகத்தான் இருக்கிறது.
திருச்சி மட்டும்ன்றி தமிழகத்தின் அனைத்து திறந்தவெளிச் சிறைச்சாலைகளான ஈழத் தமிழ் உறவுகள் இருக்கும் முகாம்களையும் இழுத்து மூடி அவர்களை சுதந்திர மனிதர்களாக நடமாட அனுமதிக்க வேண்டும்.

சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் அனைத்துவிதமான உரிமைகளும் மறுக்கப்பட்டு கொடுங்கைதிகளாக நடத்தப்பட்டு வரும் ஈழத் தமிழ் உறவுகளை சிறைகளில் இருந்து கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும்.
திருச்சி சிறப்பு முகாமில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தும் ஈழ உறவுகளின் கோரிக்கைகளை ஏற்று அவர்களை விடுதலை செய்து அவர்களுக்கான உரிய மருத்துவ சிகிச்சைகளை அளிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு வேல்முருகன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications