காவிரியில் இருந்து கர்நாடகா தண்ணீர் விடாததை கண்டித்து, உள்ளாட்சி தேர்தல் புறக்கணிப்பு: வேல்முருகன்
சென்னை: காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விடாததைக் கண்டித்து தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலை புறக்கணித்துள்ளதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதனையடுத்து, அதிமுக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வேட்புமனுக்களையும் தாக்கல் செய்து முடித்துவிட்டது. திமுக நேற்றும் இன்றும் தொடர்ந்து வேட்பாளர் பட்டியலை அறிவித்து வருகிறது. இதனை போன்றே இதர கட்சிகளும் தங்கள் கட்சியின் வேட்பாளர்களை அறிவித்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார். கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவது மற்றும் காவிரியில் தண்ணீர் திறக்க மறுப்பதை கண்டித்தும் இந்த முடிவை எடுத்துள்ளதாக வேல்முருகன் கூறியுள்ளார்.