கத்தியை விளம்பரத்துக்காக எதிர்க்கிறோம் என்பதா?: லைக்கா சுபாஷ்கரனுக்கு தி.வேல்முருகன் கடும் கண்டனம்
சென்னை: கத்தி திரைப்படத்தை விளம்பரத்துக்காக எதிர்க்கப்படுவதாக அதன் தயாரிப்பாளர் லைக்கா சுபாஷ்கரன் கூறியுள்ளதற்கு 150க்கும் மேற்பட்ட இயக்கங்களின் கூட்டியக்கமான தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனருமான தி.வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

லைக்கா நிறுவனத்தின் கத்தி திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நாளை நடைபெறுகிறது. இந்த திரைப்படத்துக்கும் பாடல் வெளியீட்டு விழாவுக்கும் தடை விதிக்கக் கோரி சென்னை மாநகர காவல்துறை ஆணையாளர் ஜார்ஜிடம் தி.வேல்முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு, புரட்சி பாரதம் கட்சியின் பூவை ஜெகன் மூர்த்தி, திராவிடர் விடுதலைக் கழகத்தின் தபசி குமரன், மாணவர் அமைப்புகளின் பிரதிநிகள் எனப் பலரும் மனு ஒன்றை அளித்தனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் தி.வேல்முருகன் கூறியதாவது:
தமிழக சட்டமன்றத்தீர்மானத்தை உதாசீனப்படுத்தும் வகையில் இலங்கை அரசுடன் வர்த்தக உறவுகளை வைத்திருப்பதாக பகிரங்கமாக ஒப்புக் கொண்ட லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பான கத்தி திரைப்படம் வெளியிடப்படக் கூடாது.
இது தமிழக சட்டமன்றத் தீர்மானத்துக்கு எதிரானது. இது தொடர்பாக நாங்கள் ஏற்கெனவே நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் முருகதாஸுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தோம். ஆனால் அவர்கள் இதுபற்றி எதுவும் சொல்லவில்லை. நாங்கள் விஜய்யை, முருகதாஸை எதிர்க்கவில்லை.
லைக்கா நிறுவனத்தின் சுபாஷ்கரன் எங்கள் கூட்டமைப்பை சந்திக்க இருப்பதாக அப்பட்டமாக ஏமாற்றுவதற்காக சொல்லப்பட்ட பொய்யை ஊடகங்களிடம் கூறியிருக்கிறார்.
இந்த கூட்டமைப்பை நடத்துகிற தமிழக வாழ்வுரிமைக் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, புரட்சி பாரதம், திராவிடர் விடுதலைக் கழகம், தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகம் போன்றவை ஒன்றும் விளம்பரம் தேட அவசியத்தில் இல்லை.
ஆனால் லைக்காவின் சுபாஷ்கரனோ, நாங்கள் விளம்பரம் தேடுவதற்காக எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என்று கூறியிருக்கிறார். இதை மிக மிக வன்மையாக கடுமையாக நாங்கள் கண்டிக்கிறோம்.
இவ்வாறு தி.வேல்முருகன் கூறினார்.












Click it and Unblock the Notifications