அனிதா, பிரதீபா, சுபஸ்ரீ நீளும் நீட் மரணங்கள்-அதிமுக அரசுக்கு உறுத்தவில்லையா? தவாக கண்டனம்
அனிதா, பிரதீபா, சுபஸ்ரீ என நீளும் நீட் மரணங்கள் திமுக அரசுக்கு நெருடலை ஏற்படுத்தவில்லையா என்று தவாக கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை : நீட் தேர்வால் தமிழகத்தில் அனிதா, பிரதீபா, சுபஸ்ரீ என நீளும் தற்கொலைகள் அதிமுக அரசுக்கு எந்த வித நெருடலையும் ஏற்படுத்தவில்லையா என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேள்வி எழுப்பி உள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் தோல்வியடைந்ததால் விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவி பிரதீபா தற்கொலை செய்துகொண்டார்.
அந்த பரபரப்பு அடங்குவதற்குள்ளாக திருச்சியைச் சேர்ந்த சுபஸ்ரீ என்கிற மாணவியும் நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்துகொண்டுள்ளது, தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தொடர் பலிகள்
இதுகுறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், நீட் நுழைவுத் தேர்வால் கடந்த ஆண்டு அனிதா பலியானார். ஆனால் அதோடு நிற்கவில்லை.இந்த ஆண்டு பலி எண்ணிக்கை அதிகரிக்கிறது. நீட் தேர்வு நடக்கும்போதே மாணவர்களின் தந்தையர் இருவர் பலியானார்கள். ஒருவர் நீட் தேர்வு எழுதச் சென்ற இடமான கேரள மாநிலத்திலும் இன்னொருவர் மதுரையிலும் பலியானார்கள்.
பிரதீபா, சுபஸ்ரீ, அருண் பிரசாத்
தேர்வு முடிவு வெளியானதும் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த பெருவளூர் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளியின் மகளான பிரதீபா என்ற மாணவி எலி மருந்தைக் குடித்து தற்கொலை செய்துகொண்டார். கடலூர் உண்ணாமலை செட்டி சாவடி பகுதியைச் சேர்ந்த மாணவர் அருண்பிரசாத் வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். நேற்று திருச்சி டோல்கேட்டைச் சேர்ந்த கண்ணன் என்பவரது மகள் சுபஸ்ரீ என்ற மாணவி நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் மனமுடைந்து தூக்குப் போட்டுத்தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தமிழக மாணவர்கள் பாதிப்பு
நீட் தேர்வால் நிகழும் மரணங்கள், தமிழக கல்வித்துறையில் இதுவரை எந்தக் காலத்திலும் நிகழ்ந்திராத வரலாற்றுத் துயரம் ஆகும். நீட் தேர்வானது கல்வியை மேம்படுத்துவதற்காகக் கொண்டுவரப்பட்டதல்ல; சமூகத்தின் மேலடுக்கில் இருக்கும், மிகமிகக் குறைந்த எண்ணிக்கையிலான வசதி படைத்த வட மாநிலத்தவருக்காக, அவர்கள் மட்டுமே மருத்துவம் படிக்க வேண்டும்; குறிப்பாக தமிழர்களை மருத்துவத் துறையிலிருந்தே அப்புறப்படுத்தி தமிழகத்தின் சிறப்பான மருத்துவக் கட்டமைப்பைத் தகர்க்க வேண்டும் என்ற தீய நோக்கில் நுழைக்கப்பட்டதுதான் இந்த நீட் நுழைவுத் தேர்வு.
காவு வாங்கும் நீட்
இதன் நடைமுறைகள் அனைத்தும் மோசடியாக இருப்பதே இதற்குச் சான்று. ஆனால் நீட் தொடங்கியதிலிருந்து இத்தனை உயிர்களைக் காவு வாங்கிய பின்னும் அதனை எந்தவித நெருடலுமின்றி கடந்துசெல்கிறது தமிழக அதிமுக அரசு. நேற்று ஒரு நிகழ்ச்சியின்போது தமிழக நலவாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம், ‘நீட் தேர்வால் தொடர்ந்து மரணங்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கிறதே'எனக் கேட்டபோது, எந்த பதிலும் சொல்லாமல் இடத்தைக் காலி செய்தார்.
கார்ப்பொரேட் கொள்ளை
நீட்-விலக்கு மசோதா ஒப்புதல் தரப்படாமல் முடக்கப்பட்டிருக்கிறது; இன்னும் தீர்ப்பு சொல்லப்படாமல் நீட் தேர்வு குறித்த வழக்கும் நிலுவையில்தான் உள்ளது உச்ச நீதிமன்றத்தில். இவற்றின் மூலம் சட்டப்படி நீட்டை விலக்குவது சாத்தியமே. ஆனால் அதைச் செய்ய அதிமுக அரசு தயாராக இல்லை; மத்திய பாஜக மோடி அரசுக்குத் துணைபோவதன் மூலம் தமிழகத்துக்குத் துரோகம் செய்கிறது. நீட் பயிற்சி மையங்கள் என்னும் பல்லாயிரம் கோடி முதலீட்டு கார்ப்பொரேட் கொள்ளைக்கு வழிவிடுகிறது. நீட் தேர்வால் இத்தனை மரணங்கள் நிகழ்ந்தும் அதனைக் கண்டுகொள்ளாமல் நீட்டை அனுமதித்துவருகிறது அதிமுக அரசு என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.