மீத்தேன் எரிவாயு திட்டம் ரத்து அறிவிப்பு தி. வேல்முருகன் வரவேற்பு!
காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை முழுமையாக கைவிடுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு தி. வேல்முருகன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி மனதார வரவேற்பதாக அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.
தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், பூமிக்கு அடியில் மீத்தேன் எரிவாயு அதிகமாக இருப்பதாக கூறி, எரிவாயு எடுக்க மத்திய அரசு முடிவு செய்தது. இந்த திட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தது. வைகோ உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் மீத்தேன் திட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடத்தினர். தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில், ஷேல் எரிவாயு எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட முடிவு செய்துள்ளதாக பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
டெல்டா மாவட்ட விவசாயிகள் எதிர்ப்பு மற்றும், நில கையகப்படுத்துதலில் நிலவிய குழப்பம் போன்றவற்றை கருத்தில் கொண்டு, திட்டத்தை கைவிடுகிறோம். திட்டம் தொடர்பாக இனிமேல் ஆய்வுகளும் நடத்த மாட்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்புக்கு அரசியல் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் தி. வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
காவிரி டெல்டா மாவட்டங்களில் கர்நாடகா மற்று மத்திய அரசின் துரோகத்தால் முப்போக சாகுபடி பொய்த்து போய்விட்டது. விவசாயம் பொய்த்துப் போன அதிர்ச்சியை தாங்க முடியாமல் விவசாயிகள் மரணமடைந்து வருவது தொடர் கதையாகி வருகிறது.
இந்த நிலையில் காவிரி டெல்டா விளைநிலங்களைப் பாலைவனமாக்கும் வகையில் மீத்தேன் எரிவாயு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முனைந்தது. இந்த திட்டத்துக்கு எதிராக தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள், விவசாய அமைப்புகள் போராட்டங்களை நடத்தின.
தற்போது இப்போராட்டங்களுக்கு மதிப்பளித்து காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை முழுமையாக கைவிடுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பை தமிழக வாழ்வுரிமைக் கட்சி முழுமையாக வரவேற்கிறது.
இதேபோல் கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தையும் மத்திய அரசு முழுமையாக கைவிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது என்று வேல்முருகன் தெரிவித்துள்ளார்.