உங்க பேஸ்ட்ல உப்பு இருக்கா... தருண் விஜய் + பாஜகவை வெளுத்தெடுக்கும் டிவிட்டர்!
தென்னிந்தியர்கள் கருப்பர்கள் என்று கருத்து கூறிய தருண் விஜய்க்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கொந்தளித்து வருகின்றனர்.
சென்னை: தென்னிந்திய மக்களை கருப்பர்கள் என்று கூறி நிறவெறியுடன் பேசிய தருண் விஜயின் உண்மையான முகத்தை பாருங்க மக்களே என்று நெட்டிசன்கள் வருத்தெடுத்து வருகின்றனர். குடிகார, போதைப்பழக்கத்திற்கு அடிமையான வட இந்தியர்களை விட தென்னிந்தியர்கள் மேல் என்றும் டுவிட்டர்வாசிகள் கூறியுள்ளனர்.
அல்-ஜசீரா நடத்திய விவாதத்தில் கலந்துக் கொண்டு பேசிய பாஜகவின் தருண் விஜய், தென்னிந்தியர்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து உள்ளார்.
தென் இந்தியர்களை குறிப்பிட்டு எங்களை சுற்றிலும் கருப்பின மக்கள் வாழ்கிறார்கள் என கூறிஉள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
டிவி விவாதத்தில் பேசிய தருண் விஜய் நாங்கள் இனவெறியர்களாக இருந்து இருந்தால், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா என தென் இந்தியர்களுடன் நாங்கள் எப்படி வாழ்வோம்? நாங்கள் எங்களை சுற்றிலும் கருப்பு நிற மக்களை கொண்டு உள்ளோம் என்று கூறியுள்ளார். இந்த கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் சவுக்கடி கொடுத்து வருகின்றனர்.
|
கரி பூசிய தருண் விஜய்
பொன் ராதாகிருஷ்ணன் முகத்தில் தார் பூச சொன்னார். தருண் விஜய் ஒட்டு மொத்த தமிழர்களின் முகத்திலும் கரி பூசிவிட்டார் என்று பதிவிட்டுள்ளார் ஒரு வலைஞர்.
|
உப்பு போட்டு சாப்பிடுவதில்லை
இதை கேட்டு உங்களுக்கு எல்லாம் ரோசம் வரவில்லையா என்று தமிழக பாஜக தலைவர்களை மீம்ஸ் போட்டு கலாய்த்துள்ளார் ஒரு வலைஞர். நாங்க உப்பு போட்டு சாப்பிடுவதில்லை என்பது போல பதிவிட்டுள்ளார்.
|
அவமானம்
தருண் விஜய் கூறிய கருத்துக்கு காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணி கண்டனம் தெரிவித்துள்ளார். நிறவெறியோடு தருண் விஜய் பேசியது அவமானகரமானது என்றும் கூறியுள்ளார்.
|
வெள்ளை இந்தியனா?
வட இந்தியர்கள் வெள்ளையர்கள், தென் இந்தியர்கள் கருப்பானவர்கள் என்று கருத்து கூறிய தருண் விஜய், கறுப்பான வைரமுத்து கையினால் பரிசு வாங்கும் படத்தை எடப்பாடி பழனிச்சாமியின் பெயரில் உள்ள பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். வெள்ளை இந்தியன் தருண் விஜய் தமிழக பாஜகவில் உள்ள வானதி ஸ்ரீனிவாசன், ஹெச் ராஜா, டாக்டர் தமிழிசை ஆகியோருடன் பேசுவார்தானே என்று கேட்டுள்ளார்.
|
தருண் விஜயின் உண்மை முகம்
இத்தனை ஆண்டுகளாக தருண் விஜய், திருவள்ளுவர், தமிழ் என்று ஏமாற்றி வந்துள்ளார். இனியாவது தமிழர்கள் தருண் விஜய்யின் உண்மை முகத்தை அறிந்து கொள்வார்களாக என்று கூறியுள்ளார் இந்த வலைஞர். திருக்குறளை வைத்து தமிழர்களை ஏமாற்றி வந்த தருண் விஜய்யின் முகமூடி கிழிந்திருப்பதாக கூறியிருக்கிறார் இவர் தருண் விஜயின் மோசமான கருத்தை பெரிதுப்படுத்த கூடாது எனவும் சிலர் டுவிட்டரில் கருத்து தெரிவித்தனர்.
|
பாஜகவின் உண்மை முகம்
வட இந்தியர்களை விட தென் இந்தியர்கள் மேலானவர்கள். அவர்கள் மது அடிமையில்லை, போதைப்பொருள், பான்பராக், குட்காவிற்கு அடிமையில்லை, பெண்களை பலாத்காரம் செய்வதில்லை. தருண் விஜய் வெட்கப்பட வேண்டும். பாஜகவின் உண்மை முகத்தை உணர்ந்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார் இவர்.
|
நிற வெறி பார்ப்பதா?
இந்தியாவில் நிறவெறி பார்க்க மாட்டோம் என்று சுஷ்மா சுவராஜ் கூறிய மறுநாளே பாஜகவைச் சேர்ந்த தருண் விஜய் தென் இந்தியர்கள் கருப்பர்கள் என்று கூறி பாஜகவின் நிறவெறிக் கொள்கையை தோலுரித்து காட்டிவிட்டார் என்று கூறியுள்ளார் ஒருவர்.