ஆன்லைன் வர்த்தகம்: ரூ.50 கோடி சுருட்டிய அண்ணன், தங்கை கைது
சென்னை: சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் மூலம் ரூ.50 கோடி சுருட்டிய கேரளத்தைச் சேர்ந்த அண்ணன் தங்கையை போலீசார் கைது செய்தனர்.
சென்னையை அடுத்த படூர் ஒய்.எம்.ஆர். சாலையில் வசித்து வருபவர் பிரகாசம் (வயது 37). ஆடிட்டர். இவரது தங்கை ரேகா (30), எம்.பி.ஏ. படித்து உள்ளார். இவர்களது சொந்த ஊர் கேரள மாநிலத்தில் கண்ணனூர் ஆகும்.
இவர்கள் இருவரும் ‘நாங்கள் தங்கம், வெள்ளி, மற்றும் ரியல் எஸ்டேட்களில் முதலீடு செய்து வருகிறோம். ஆகையால் நீங்கள் பெருந்தொகையை எங்களிடம் அளித்தால், நாங்கள் அதிக விலைக்கு வரும்போது 40 சதவீதம் வரை கூடுதலாக பணம் தருகிறோம்' என்று ஆன்லைன் மூலம் கவர்ச்சிகரமாக விளம்பரத்தை தெரியபடுத்தினர்.
இதை பார்த்த காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே போஸ்டல் காலனியில் வசிக்கும் வக்கீல் அஜித்குமார் ரூ.10 லட்சத்தை ஆன்லைனில் கடந்த ஆண்டு அனுப்பியதாக தெரிகிறது. ஆனால் குறிப்பிட்ட சில மாதங்கள் ஆகியும் அஜித்குமாருக்கு கட்டிய பணம் மற்றும் கூடுதல் பணம் கிடைக்கவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த அஜித்குமார் காஞ்சீபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு ரமேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர்கள் அஞ்சாலட்சுமி, பார்வதி, ராஜேந்திரன், மற்றும் போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். ஆன்லைன் மூலம் ஏமாற்றிய பிரகாசம், அவருடைய தங்கை ரேகா ஆகியோரை பிடிக்க போலீசார் சென்னைக்கு விரைந்தனர்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் அவர்களை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் காஞ்சீபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதையொட்டி அவர்கள் வேலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.
இவர்கள் இருவரும் சென்னை மற்றும் காஞ்சீபுரம் சுற்றுபுற பகுதிகளில் சுமார் ரூ.50 கோடி அளவுக்கு ஆன்லைன் மூலம் மோசடி செய்து இருப்பதாக தெரியவருகிறது. இதுகுறித்து சென்னை மாநகர காவல் துறை அலுவலகம், காஞ்சீபுரம் மாவட்ட குற்றபிரிவு போலீஸ் அலுவலகம் ஆகிய இடங்களில் புகார் மனுக்கள் வந்த வண்ணம் உள்ளன.
சமீபத்தில்தான் இந்த மோசடி வழக்கில் சென்னை நகர போலீசார் பிரகாசத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். சில தினங்களுக்கு முன்பு தான் இவர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில் தற்போது காஞ்சீபுரம் போலீசாரால் பிரகாசம், அவரது தங்கை ரேகா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications