ஐஎஸ்ஐ உளவாளி ஜாகீர் உசேனின் 2 கூட்டாளிகள் கைது.. ஒருவர் இலங்கையர்
சென்னை: சென்னையில் சிக்கிய ஐஎஸ்ஐ உளவாளியான இலங்கையைச் சேர்ந்த ஜாகீர் உசேனின் கூட்டாளிகள் இருவரை போலீஸார் கைது செயதுள்ளனர்.
கைதான இருவரில் சிவபாலன் என்பவர் இலங்கையைச் சேர்ந்தவர் ஆவார். இன்னொருவர் பெயர் முகம்மது சலீம்.
கடந்த 29ம் தேதி சென்னையில் வைத்துச் சிக்கினார் உசேன். அவர் இலங்கையைச் சேர்ந்தவர். பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவாளியும் ஆவார். இவரிடமிருந்து பல பரபரப்புத் தகவல்கள் சிக்கின. சென்னைக்குத் தீவிரவாதிகள் குறி வைத்திருப்பதும் தெரிய வந்தது.
இவர் கைதான அடுத்த 2 நாட்களிலேயே அதாவது நேற்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்ததால் பரபரப்பு கூடியுள்ளது. தற்போது கியூ பிரிவு போலீஸாரின் தீவிர விசாரணைக்கு உசேன் உட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் உசேனிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அவரது கூட்டாளிகள் இருவரைப் போலீஸார் சென்னையில் கைது செய்துள்ளனர். ஒருவர் பெயர் முகம்மது சலீம். இன்னொருவர் சிவபாலன்.
இவர்கள் தங்கியிருந்த வீடுகளில் சோதனை நடத்திய போலீஸார் அங்கிருந்து ரூ. 2.5 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுக்களையும் பறிமுதல் செய்துள்ளனர். இவர்களிடமும் தற்போது கியூ பிரிவு போலீஸார் விசாரணை நடத்தவுள்ளனர்.