சென்னை மதுரவாயலில் அரசுப் பேருந்து- தனியார் பேருந்து மோதல்: ஒருவர் பலி; 10 பேர் காயம்
சென்னை: சென்னை மதுரவாயலில் அரசுப் பேருந்து மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் தனியார் பேருந்து ஓட்டுநர் பலியானார். 10 பேர் படுகாயமடைந்தனர்.
சென்னை கோயம்பேட்டில் இருந்து திருநெல்வேலி நோக்கி நேற்றிரவு ஒரு அரசுப் பேருந்து மதுரவாயல் பைபாஸ் சாலையில் போரூர் அடுத்த பெரியபணிச்சேரி பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஒருவர் சாலையைக் கடக்க முயன்றுள்ளார்.
இதனால் அரசு பேருந்து ஓட்டுனர் திடீரென பிரேக் போட்டார். அப்போது பின்னால் வேகமாக சென்னையில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் ஏசி பேருந்து அந்த அரசு பேருந்தின் பின்பகுதியில் மோதியது.
இதில் தனியார் பேருந்தில் இருந்த மற்றொரு ஓட்டுனர் சங்கர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் வேகமாக மோதியதால் அரசு பேருந்தின் பின் சீட்டில் அமர்ந்த பயணிகள் மற்றும் தனியார் பேருந்தின் முன்பக்கத்தில் அமர்ந்த பயணிகள், சாலையை கடக்க முயன்ற நபர் என 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்தனர். காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர். கடந்த மாதம் இதே சாலையில் சேலம் நோக்கி சென்ற அரசு பேருந்து கவிழ்ந்து எஞ்சினியரிங் மாணவி பலியானார். 10 க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்த சம்பவம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.