கட்சி கடந்த கள்ளக்காதல்... 'திமுக' கவுன்சிலர் வெட்டிக் கொலை- 'அதிமுக' பெண் கவுன்சிலர் தற்கொலை!!
பெரம்பலூர்: கட்சி கடந்த கள்ளக்காதல் தகராறில் பெரம்பலூரில் தி.மு.க. கவுன்சிலர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கள்ளக் காதலன் இறந்த சோகத்தில் அ.தி.மு.க. பெண் கவுன்சிலர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெரம்பலூர் வெங்கடேசபுரத்தை சேர்ந்தவர் அன்புமுத்து. பெரம்பலூர் நகராட்சி 11-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக இருந்தார். இவருக்கு திருமணமாகி ஜெயலட்சுமி என்ற மனைவியும், செம்மொழி என்ற மகளும் உள்ளனர்.
துறைமங்கலம் புதுக்காலனி பள்ளிவாசல் பிரதான வீதி6-வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் மயில்சாமி. இவரது மனைவி தீபா. இவர் 8-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலராக பதவி வகித்துவந்தார். இவர்களுக்கு வருண், ராஜேஷ் என்ற 2 மகன்கள் உள்ளனர்.
நகராட்சி தொடர்பான கூட்டங்களில் சந்தித்து கொள்ளும் அன்புமுத்து- தீபா இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இந்த கள்ளக்காதலை அறிந்த மயில்சாமி, தனது மனைவி தீபாவையும், அன்புமுத்துவையும் கண்டித்தார். இதனால் தீபாவுக்கும் அவரது கணவர் மயில்சாமிக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்தனர்.
ஆனாலும் தீபா-அன்புமுத்து கள்ளக்காதல்தொடர்ந்து இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று பகல் 2.30 மணிஅளவில் தீபாவீட்டில் தீபாவும், அன்புமுத்துவும் இருந்தனர். அப்போது வீட்டுக்கு வந்த மயில்சாமி, அன்புமுத்துவை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் அன்புமுத்து துடிதுடித்து இறந்தார்.
இந்த படுகொலையை நேரில் பார்த்த தீபா அலறி துடித்ததோடு சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதை பார்த்த மயில்சாமி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நேரத்தில் தி.மு.க. கவுன்சிலர் வெட்டிக்கொலை செய்யப்பட்டதும், அ.தி.மு.க. பெண் கவுன்சிலர் தற்கொலை செய்து கொண்டதும் பெரம்பலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.