திருச்சி அரசு மருத்துவமனையில் சடலங்கள் மாற்றி ஒப்படைப்பு.. உறவினர்களின் ரகளையால் பரபரப்பு
திருச்சி அரசு மருத்துவமனையில் சடலங்கள் மாற்றி ஒப்படைத்ததால் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி: திருச்சி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த 2 பேரின் சடலங்களை உறவினர்களிடம் மாற்றி ஒப்படைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மாவட்டம், வையம்பட்டி கருங்குளத்தைச் சேர்ந்தவர் மரிய அருள்ராஜ் (58). கூலித் தொழிலாளியான இவர் சாலை விபத்தில் சிக்கி காயமடைந்ததால் சிகிச்சைக்காக திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்தது.
இதேபோல, விபத்தில் இறந்த திருச்சி பெரிய மிளகுபாறையைச் சேர்ந்த செல்லதுரை (62) உடலும் சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்தது.
போலீஸாரின் நடைமுறைக்குப் பிறகு இருவரின் பிரேதப் பரிசோதனைக்குப் முடிவடைந்த நிலையில் உடலைப் பெற்றுக்கொள்ள இருவரது உறவினர்களும் பிணவறைக்கு வெளியே காத்திருந்தனர்.
இதில் முதலாவதாக செல்லதுரையின் உடல் ஒப்படைக்கப்படும் என்று கூறியதால் அவருடைய உறவினர்கள் ஆம்புலன்ஸ் கொண்டுவந்திருந்தனர். சடலம் பிற்பகல் 3.30 மணிக்கு செல்லதுரையின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலமாக உடல் கொண்டுசெல்லப்பட்டது.
இதைத்தொடர்ந்து, மரிய அருள்ராஜ்ஜின் உடல் 4 மணிக்கு அவருடைய உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று கூறப்பட்டதைத் தொடர்ந்து, அப்போது அங்கே திரண்டிருந்த உறவினர்கள் அவரது உடலைப் பார்க்க வேண்டும் என்று கதறி அழுதனர்.
இதையடுத்து, மரிய அருள்ராஜ்ஜின் உடலைப் பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. உடலைப் பார்த்த உறவினர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கே இருந்த து மரிய அருள்ராஜ்ஜின் உடல் இல்லை. இதை போலீஸாரிடம் தெரிவித்ததால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
அதன்பிறகுதான் தெரிந்தது பிணவறை ஊழியர்கள் சடலத்தை மாற்றி வழங்கியது தெரியவந்தது. இதையடுத்து பிரேதப் பரிசோதனை ஊழியர்களுடன் மரிய அருள்ராஜ்ஜின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே செல்லதுரையின் உடலை கொண்டுசென்ற உறவினர்கள், சடலத்துக்கு இறுதிச் சடங்கு நடத்திக்கொண்டிருந்தனர். அப்போது, உறவினர்கள் சிலருக்கு இது செல்லதுரை போல் இல்லை என்று தெரியவந்தது.
தங்கள் தவறை உணர்ந்த பிரேதப் பரிசோதனை செய்த ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு செல்லதுரையின் உறவினர்களிடம் போனில் தொடர்புகொண்டு சடலம் மாற்றி வழங்கப்பட்டுவிட்டது என்று கூறினர். மேலும், உடனடியாக சடலத்தை கொண்டுவந்து மருத்துவமனையில் மாற்றி செல்லுப்படி தெரிவித்தனர்.
இதையடுத்து செல்லதுரையின் உறவினர்கள் மரிய அருள்ராஜ்ஜின் உடலைக் கொண்டு சென்று கொடுத்துவிட்டு செல்லதுரையின் உடலைப் பெற்றுச் சென்றனர். அதேபோல, மரிய அருள்ராஜ்ஜின் உடல் அவரது உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இப்படி, பிரேதப் பரிசோதனை செய்த ஊழியர்கள் சடலங்களை மாற்றி ஒப்படைத்ததால் திருச்சி அரசு மருத்துவமனை வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.