கட்டுக்கட்டாக 500, 1000 நோட்டுகளை மாற்றிய போக்குவரத்து கழக ஊழியர்கள் கைது
ரூ.50 லட்சம் பணத்தை மாற்ற முயன்ற போக்குவரத்து கழக ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டடுள்ளனர்.
வேலூர்: போக்குவரத்து கழக 2 ஊழியர்கள் 500, 1000 ரூபாய் நோட்டுகளாக இருந்த 50 லட்சம் ரூபாய்யை மாற்ற முயன்றபோது கைது செய்யப்பட்டனர்.
500, 1000 ரூபாய் செல்லாத நோட்டுகளை புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றும் கமிஷன் பணிதான் நாடு முழுவதும் இப்போது கொடி கட்டிப் பறக்கிறது.
வேலூர் மாவட்டம் சோழிங்கர் டெப்போவில் காசாளராக ராஜாராம் என்பவரும் போக்குவரத்து கண்காணிப்பாளராக ஜோஷ்வா என்பவரும் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் தொழிலதிபர் ஒருவர் உதவியுடன் 30 சதவீத கமிஷன் தொகை அளிப்பதாக கூறி போக்குவரத்துக்கழக பணம் 50 லட்சம் ரூபாயை புதிய நோட்டுகளாக மாற்ற முயற்சிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து ஊழியர்கள் 2 பேரையும் நேற்று கைது செய்த போலீசார், போக்குவரத்துத்துறை ஊழியர்கள் உதவிக்கு நாடிய தொழிலதிபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசு போக்குவரத்துத்துறை பணத்தை ஊழியர்கள் 2 பேர் முறைகேடாக மாற்ற முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.