கம்பம் நகரில் வெடித்துச் சிதறிய பட்டாசு ஆலை.. 2 தொழிலாளர்கள் உடல் சிதறி பலி!
தேனி: தேனி மாவட்டம் கம்பம் நகரில் அமைந்துள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இரண்டு பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக கம்பம் வடக்கு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேனி மாவட்டம் கம்பம் நகரில் காட்டுப்பள்ளி வாசல் தெருவில் திருப்பதி என்பவருக்கு சொந்தமான லட்சுமி பட்டாசு தொழிற்சாலை அமைந்துள்ளது. இன்று காலை வழக்கம்போல் தொழிற்சாலை பணியாளர்களான அய்யப்பன், நாகார்ஜுன், சூர்யா, தினேஷ் என்ற தீனா ஆகிய நான்கு பேரும் பட்டாசு ஆலையில் பணிக்கு வந்துள்ளனர் .

தேர்தல் விடுமுறை காரணமாக இரண்டு நாட்களாக பணிக்கு யாரும் வராமல் தொழிற்சாலை மூடிய நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இரண்டு நாட்களுக்குப் பிறகு பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட வந்த தினேஷும் சூர்யாவும் அடைத்து வைக்கப்பட்டிருந்த மூலப்பொருட்கள் வைத்துள்ள அறையை திறந்து உள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக அந்த அறையில் வெடி விபத்து ஏற்பட்டு அறையைத் திறந்த சூர்யாவும், தினேஷும் உடல் சிதறி உயிரிழந்தனர்.
இதனைப் பார்த்த அவர்களுடன் பணிபுரிய வந்த மற்ற இருவரும் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்துள்ளனர். இதுகுறித்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து விரைந்து வந்த போலீசார் உடல் சிதறி கிடந்த இறந்தவர்களின் உடற்பாகங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து அப்பகுதியில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். மேலும் வெடி விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கம்பம் நகர் பகுதியில் பட்டாசு ஆலை எதுவும் இல்லாத சூழ்நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்புதான் இந்த பட்டாசு ஆலையை புதிதாக திறந்து உள்ளனர். இந்த ஆலை வெடி விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக உள்ளது.
அண்மையில் விருதுநகர் அருகே கட்டார்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 25 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் பட்டாசு ஆலை விபத்தில் இருவர் உடல் சிதறி பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications