இரட்டை இலை சின்னம் எங்களுக்கே... ஜெயலலிதா நினைவிடத்தில் டிடிவி தினகரன் நம்பிக்கை
இரட்டை இலை சின்னம் தங்களுக்கே கிடைக்கும் என்று அதிமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
சென்னை: இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற பெரிய விவாதம் டெல்லி தேர்தல் ஆணையர் முன்னிலையில் இன்று நடைபெற்றது.
இந்த விவாதம் முடிவடைந்து, இரட்டை இலை சின்னம் யாருக்கு என்று தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்து கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் அதிமுகவின் ஓபிஎஸ் அணியினரும், சசிகலா அணியினரும் தங்களுக்கே இரட்டை இலை என்று நம்பிக்கையோடு செய்தியாளர்களிடம் பேட்டி அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னையில் ஆர்.கே. நகர் வேட்பாளரான டிடிவி தினகரன், இரட்டை இலை சின்னம் தங்களுக்கே கிடைக்கும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் இரட்டை இலை சின்னத்தில் தான் ஆர்.கே.நகரில் போட்டியிடுவேன் என்றும் அவர் உறுதியாக கூறியுள்ளார்.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய நாளையே கடைசி நாள் என்ற நிலையில், இரட்டை இலை சின்னம் விவகாரம் அதிமுகவில் மட்டுமல்லாமல் தமிழகத்தையும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், டிடிவி தினகரன், சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு இன்று மாலை சென்றார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், வெற்றி நிச்சயம் எங்களுக்கே என்று கூறினார். ஃபெரா வழக்கிற்கும் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. அதனால் தேர்தலில் நிற்பது தடை படாது என்றும் தினகரன் கூறினார்.