பதன்கோட் தாக்குதல் எதிரொலி: கூடங்குளத்திற்கு பாதுகாப்பு அதிகரிப்பு; 2 அதி நவீன ரேடார் வருகை !
நெல்லை: கூடங்குளம் மற்றும் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ மையத்தை பாதுகாக்கும் வகையில் ராணுவத்தின் மேலும் இரண்டு அதி நவீன ரேடார் வாகனங்கள் வந்துள்ளன. இதனால் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்படும் என தெரிகிறது.
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே இஸ்ரோ மையம், கூடங்குளம், விஜயநாராயணம் கடற்படை தளம் அமைந்துள்ளது. இங்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் சிறப்பு அதிரடி படையினர், உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இஸ்ரோ மையம், கூடங்குளத்தில் பாதுகாப்பில் கடும் குளறுபடி ஏற்படுவதாக பல்வேறு தரப்பில் இருந்து புகார்கள் எழுந்தன. கடந்த மாதம் 12, 13ம் தேதிகளில் இஸ்ரோ மையத்தை சுற்றி சிறிய அளவிலான கிளைடார் விமானம் பறந்தது.

இதையடுத்து நெல்லை எஸ்பி தலைமையிலான அதிரடி படையினர் அடர்ந்த காடுகளில் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது உள் வனப்பகுதியில் வைபை கிக்னல் கிடைத்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் அங்கு கிளைடர் விமானம் பறந்ததற்கான அறிகுறி இல்லை என முடிவில் போலீசார் தெரிவித்தனர். இருப்பினும் கிளைடர் விமானம் குறித்த மர்மம் இன்னும் விலகவில்லை.
ஆனால் திடீரென கடந்த வாரம் மகேந்திரகிரி இஸ்ரோ மைய வனப்பகுதியில் ஓடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு வாலிபர் சுற்றி திரிந்தார். அவரை பார்த்த வனப்பகுதி கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறி விடுவித்து விட்டதாக கூறப்படுகிறது.
கூடங்குளம் மற்றும் இஸ்ரோ மையத்தில் வானில் பறக்கும் பொருட்களை கண்காணிக்க ரேடார் வசதி இல்லாதது குறித்து மத்திய அரசுக்கு உளவுத்தறை தகவல் தெரிவித்தது. பதன்கோட் விமான படை தாக்குதல் சம்பவம் போன்று தூத்துக்குடி கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலாம் எனவும் உளவுத்துறையினர் எச்சரிக்கை செய்து வருகின்றனர்.
இதையடுத்து விரைந்து செயல்பட்ட மத்திய அரசு விமானப்படையின் அதிநவீன ரேடார் மற்றும் விமானங்களை சுட்டு வீழ்த்தும் ஏவுகணை வாகனங்கள் 7ஐயும் அனுப்பி வைத்துள்ளது. இந்த நிலையில் நேற்று மாலையில் மேலும் இரணடு அதிநவீன ரேடார் வாகனங்கள் வந்துள்ளன. இதி்ல் தரைப்படை மற்றும் விமானப்படையை சேர்ந்த 50 வீரர்கள் நெல்லைக்கு வந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications