தினகரனை அழைத்து வந்து உட்கார வந்த 'அதிமுக எம்எல்ஏக்கள்' .. அதிர்ச்சியில் எடப்பாடி அணி
Recommended Video

சென்னை: ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற்று முதல் முறையாக இன்று சட்டசபைக்குள் காலடி எடுத்து வைத்த டிடிவி தினகரனுக்கு, அதிமுகவை சேர்ந்த இரு எம்எல்ஏக்கள் வரவேற்பு அளித்து ஆளும் தரப்புக்கு அதிர்ச்சியை பரிசளித்துள்ளனர்.
சட்டசபை கூட்டத்தொடரின் முதல்நாளான இன்று, தினகரன் அவைக்கு வந்திருந்தார். ஆளுநர் உரையை அவர் பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்தார்.
திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர்ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தபோதிலும், தினகரன் வெளிநடப்பு செய்யவில்லை.

தினகரன் எச்சரிக்கை
தினகரனுக்கு சட்டசபையில், இருக்கை எண் 148 ஒதுக்கப்பட்டுள்ளது. தினகரன் சட்டசபைக்குள் வந்ததும் எடப்பாடி அணிக்கு அதிர்ச்சியளிக்கும் ஒரு சம்பவம் நடந்தது. அதிமுகவில் தனக்கு ஸ்லீப்பர் செல்கள் இருப்பதாகவும், நம்பிக்கை வாக்கெடுப்பு நேரத்தில் ஸ்லீப்பர் செல்களுக்கு பேட்டரி போடுவேன் என்றும் தினகரன் கூறியிருந்தார்.

வரவேற்ற அதிமுக எம்எல்ஏக்கள்
இந்த நிலையில், இன்று சட்டசபைக்குள் தினகரன் வந்ததும், ஆதரவு எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி மற்றும் கலைச்செல்வன் தினகரனை வரவேற்று அவரது இருக்கையில் அமர வைத்தனர். தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், இந்த இரு எம்எல்ஏக்களும் தினகரனை வரவேற்றனர். இவர்கள் ஏற்கனவே எடப்பாடி அரசு மீது நம்பிக்கை இல்லை என வெளிப்படையாக கடிதம் அளித்தவர்கள்தான். இருப்பினும் சபாநாயகர் இவர்கள் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் அதிமுக எம்எல்ஏக்களாக தொடர்கிறார்கள்.

கோபப்படுத்திய நிகழ்வுகள்
எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்ட பின் சட்டசபைக்கு முதல் முறையாக வந்ததால் தினகரனுக்கு திமுக எம்.எல்.ஏக்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்த காட்சிகள் எல்லாம் ஆளும் தரப்புக்கு கடும் எரிச்சலை உண்டு செய்வதாக இருந்தது.

விமர்சனங்கள்
ஆர்.கே.நகரில், தினகரன் வெற்றிபெற திமுக உதவி செய்ததாக அதிமுக விமர்சனங்கள் செய்து வரும் நிலையில், திமுக எம்எல்ஏக்கள் சட்டசபையில் தினகரனுக்கு வரவேற்பு அளித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications