மேலும் 2 அதிமுக நிர்வாகிகள் களையெடுப்பு.. தொடர்கிறது ஜெ. அதிரடி
சென்னை: அதிமுகவில் நிர்வாகிகள் களையெடுப்பு தொடர்கிறது. மேலும் 2 நிர்வாகிகளை கட்சி பொதுச் செயலாளர் ஜெயலலிதா களையெடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கழகத்தின் கொள்கை - குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், வேலூர் மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜே.பி.சேகர் (ராணிப்பேட்டை நகர கழக செயலாளர், நகரமன்ற துணைத் தலைவர்), கே.பி.சந்தோஷம் (மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர், நகரமன்ற 18-வது வார்டு உறுப்பினர்) ஆகியோர் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.
கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து தர்மபுரி, கன்னியாகுமரி மாவட்ட அதிமுக நிர்வாகிகள், 3 அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆகியோரை கட்சிப் பொறுப்புகளிலிருந்தும், அமைச்சர் பொறுப்பிலிருந்தும் தூக்கினார் ஜெயலலிதா. இந்த நிலையில் மேலும் 2 அதிமுக நிர்வாகிகள் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.