புலிக்கு விஷம் வைத்து கொன்று நகம், தோல் கர்நாடகாவிற்கு கடத்தல்: 2 பேர் கைது
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் வனவிலங்குகளுக்கு விஷம் வைத்து கொன்ற இரண்டு பேர் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சத்தியமங்கலத்தில் புலிகள் காப்பகம், ஆசனூர் மற்றும் தாளவாடி வனத்தில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் குடிக்க வரும் வனவிலங்குகளுக்கு விஷம் வைத்து கொன்று அதன் இறைச்சி மற்றும் தந்தங்களை கடத்தும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வந்தன.
இதையடுத்து குற்றவாளிகளை பிடிக்க ஆசனூர் புலிகள் காப்பக இணை இயக்குர் பத்மா, தாளவாடி வனச்சரக அலுவலர் உதயராஜ் மற்றும் வனப்பாதுகாப்பு படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
கர்நாடகத்திற்கு தப்பும் வேட்டையர்கள்:
தாளவாடி வனத்தில் வனவிலங்குகளை வேட்டையாடிவிட்டு கர்நாடகத்துக்கு தப்பியோடும் மர்மநபர்கள் பற்றி வனத்துறையினர் தகவல் சேகரித்தனர்.
மர்ம ஆசாமிகள் நடமாட்டம்:
இந்த நிலையில் தமிழக, கர்நாடக எல்லையில் வனத்துறையினர் மர்ம ஆசாமிகள் நடமாட்டம் குறித்து ஆய்வு செய்து அங்கு சுற்றித் திரிந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர்.
இரண்டு பேர் கைது:
அப்போதுதான் அவர் மூக்கன்பாளையத்தைச் சேர்ந்த குமாரநாயக் என்பதும், இவர் மீது பல்வேறு வனக்குற்ற வழக்குகள் பதிவாகி இருப்பதும் தெரியவந்தது. குமாரநாயக் அளித்த தகவலின்பேரில் அதே ஊரைச் சேர்ந்த பொம்மன் என்பவரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.
நீர்நிலைகளில் யூரியா விஷம்:
இவர்கள் எட்டேகவுண்டர் தொட்டி மற்றும் மூக்கன்பாளையம் வனத்தில் உள்ள நீர் நிலைகளில் யூரியாவுடன் விஷத்தன்மையுள்ள பொருட்களை கலந்து விட்டுள்ளனர்.
உயிரிழக்கும் விலங்குகள்:
அதனை குடித்ததும் உயிரிழக்கும் புள்ளிமான் இறைச்சிகளை விற்பதும் யானைகளின் தந்தங்கள் மற்றும் புலி நகங்கள், தோல்களை கடத்துவதும் போன்ற குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டது தெரியவந்தது.
புலியைக் விஷம் வைத்துக் கொலை:
கடந்த பிப்ரவரி மாதத்தில் தாளவாடி அருகே புலிக்கு விஷம் வைத்து கொன்று அதன் நகங்கள், தோலை கர்நாடகத்துக்கு கடத்தியதாக இவர்கள் ஒப்புகொண்டனர்.
கைது செய்து விசாரணை:
பிடிபட்ட இருவர் மீதும் வனவிலங்குகளை வேட்டையாடியது, சந்தன மரம் மற்றும் யானை தந்தம் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தமிழகம் மற்றும் கர்நாடக நீதிமன்றத்தில் உள்ளது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.












Click it and Unblock the Notifications