கிருஷ்ணகிரி விபத்தில் பலியான இரு +1 மாணவர்கள்- ரேஷன் அரிசி வாங்கிவிட்டு திரும்பிய போது கார் மோதியது
கிருஷ்ணகிரி அருகே நிகழ்ந்த சாலைவிபத்தில் இரண்டு பிளஸ் 1 மாணவர்கள் ரேஷன் அரிசி வாங்கிவிட்டு திரும்பியபோது விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
Recommended Video

பர்கூர் : கிருஷ்ணகிரி அருகே போட்டிபோட்டு சென்றபோது தறிகெட்டு ஓடிய கார் மோதி இரண்டு பிளஸ் 1 மாணவர்கள் உள்பட 4 பேர் பலியாயினர். ரேஷன் அரிசி வாங்கிவிட்டு திரும்பிய போது மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரியில் இருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கந்திகுப்பம் என்ற கிராமம் உள்ளது. இந்த இடம் அடிக்கடி சாலை விபத்துகள் நடைபெறும் இடமாக இருந்து வருகிறது. இந்தப் பகுதியில் வேகத்தடை அமைக்குமாறு இந்தப் பகுதி மக்கள் வெகு நாட்களாக போராடி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி போட்டி போட்டுக் கொண்டு 2 கார்கள் சென்றுள்ளன. அப்போது எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற சென்னை பதிவெண் கொண்ட காரின் மீது கர்நாடக பதிவெண் கொண்ட கார் பயங்கரமாக மோதியது.

தறி கெட்டு ஓடிய கார்
இதனால் சென்னை பதிவெண் கொண்ட கார் சாலையில் தறிகெட்டு ஓடி அதன் முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள், மொபட், சைக்கிள்கள் மீதும் சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீதும் பயங்கரமாக மோதியது. பின்னர் ஒரு தடுப்பு சுவரில் மோதி நின்றது.

2 பிளஸ் 1 மாணவர்கள் பலி
இந்த கோர விபத்தில் கந்திகுப்பத்தை சேர்ந்த சரவணகுமார் என்பவரின் 11 வயது மகன் பரத் சாமுண்டி, அவருடைய சித்தப்பா சதீஷ்குமாரின் 17 வயது மகன் கோகுல்,45 வயது வனஜா, 40 வயது தர்மன் ஆகிய 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பொதுமக்கள் ஆத்திரம்
மேலும் 6 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். விபத்தில் பலியான பரத் சாமுண்டி, கோகுல் ஆகிய இருவரும் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ்-1 படித்து வந்தனர். இருவரும் ரேஷன் கடையில் அரிசி வாங்கி அதை சைக்கிளில் வைத்து தள்ளிக்கொண்டு வந்தபோது விபத்தில் சிக்கி பலியாகிவிட்டனர்.

மறியல், காருக்கு தீ
விபத்து பற்றி தகவல் அறிந்ததும் கந்திகுப்பம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கு திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் விபத்துக்குள்ளான கர்நாடக மாநில பதிவெண் கொண்ட காரை கந்திகுப்பம் போலீஸ் நிலையம் அருகிலேயே பொதுமக்கள் தீ வைத்து எரித்தனர்.

பாதிப்பு
இதேபோல சென்னை பதிவெண் கொண்ட கார் கண்ணாடிகளை உடைத்து, சாலையின் இருபுறமும் டயர்களை போட்டு தீ வைத்து கொளுத்தினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருபக்கமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன.

போலீஸ் விசாரணை
இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications