அதிமுகவில் நடக்கிற பிரச்சனைக்கும் பாஜகவிற்கு சம்பந்தமில்லை… சொல்கிறார் மயிலாப்பூர் எம்எல்ஏ நட்ராஜ்
அதிகவில் நடக்கும் கோஷ்டி பூசலுக்கும் பாஜகவிற்கு எந்தவித சம்பந்தமும் இல்லை என்ற மயிலாப்பூர் எம்எல்ஏ நட்ராஜ் கூறியுள்ளார்.
சென்னை: அதிமுகவின் இரு அணிகளும் இணைய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் என்று ஓபிஎஸ் அணியில் உள்ள மயிலாப்பூர் எம்எல்ஏ நட்ராஜ் கூறியுள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவில் பிளவு ஏற்பட்டு இரு அணிகளாக செயல்பட்டு வந்தனர். இரு அணிகளும் ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி இறைத்துக் கொண்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து இரு அணிகளும் சேர்ந்தால்தான் இரட்டை இலை சின்னத்தைக் காப்பாற்ற முடியும் என்ற நிலை உருவானது. இதனால் இரு தரப்பினரும் இணைவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளப்பட்டன. மேலும், தினகரன் குடும்பத்தை கட்சியில் இருந்து ஒதுக்கி வைத்துள்ளதாகவும் அதிமுக அம்மா கட்சியின் அமைச்சர்கள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணிகள் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான குழுக்களை அமைத்துள்ளனர்.
இந்நிலையில், மயிலாப்பூர் எம்எல்ஏ நட்ராஜ் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசும் போது, ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணிகள் இணைய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் என்று கூறினார். மேலும் அதிமுகவில் நடக்கும் உட்கட்சிப் பிரச்சனையில் பாஜகவின் பின்னணி எதுவும் இல்லை என்று திட்டவட்டமாக நட்ராஜ் தெரிவித்தார்.