திருவெறும்பூரில் நானே நிற்கிறேன்... அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு ஆதரவு திரட்டிய உதயநிதி...
திருச்சி: திருவெறும்பூர் தொகுதியில் நானே நிற்பதாகக் கருதி, தேர்தல் பணியாற்றி, மகேஷ் பொய்யாமொழியை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று நண்பர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு ஆதரவு திரட்டி வருகிறார் உதயநிதி ஸ்டாலின்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சன் நியூஸ் தொலைக்காட்சியில் ஞாயிறன்று ஒளிபரப்பான 'ஸ்டாலினிடம் கேளுங்கள்' என்ற நிகழ்ச்சியில், உங்கள் குடும்பத்தில் இருந்து இனி யாராவது அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், "நிச்சயமாக எனது மகனாக இருந்தாலும் சரி, எனது மருமகனாக இருந்தாலும் சரி, எங்கள் வீட்டில் இருக்கக் கூடிய யாராக இருந்தாலும் அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்பதை நான் அழுத்தம் திருத்தமாக தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி
திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஸ்டாலின் குடும்பத்துடன் நெருங்கிய தொடர்புடையவர். மேலும், உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றத் தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார்.

களத்தில் உதயநிதி
இதுநாள் வரை களத்தில் இருந்து ஒதுங்கியிருந்த உதயநிதி, நேற்று ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருச்சிக்கு வந்தார். தனது நண்பரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி போட்டியிடும் திருவெறும்பூர் தொகுதிக்குச் சென்று, கள நிலவரங்களைக் கேட்டறிந்தார். பின்னர், திமுக ஒன்றிய, நகர, பகுதி செயலாளர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

நானே நிற்கிறேன்
வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு நேற்று ஆதரவு திரட்டிய உதயநிதி, "திருவெறும்பூர் தொகுதியில் நானே நிற்பதாகக் கருதி, தேர்தல் பணியாற்றி, மகேஷ் பொய்யாமொழியை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும்" என்று திமுக நிர்வாகிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சபரீசன் வாழ்த்து
தொடர்ந்து, அரியமங்கலம் திடீர் நகரில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த மகேஷ் பொய்யாமொழியை, உதயநிதியும், ஸ்டாலின் மருமகன் சபரீசனும் நேரில் சந்தித்து, தேர்தலில் வெற்றி பெற வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

அன்பில் மகேஷ் ஜெயிப்பார்
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, அரசியல் சம்பந்தமான கதையம்சம் கொண்ட கதையும், நல்ல இயக்குநரும் கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்றார்.திருவெறும்பூர் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் எனது நண்பர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெற்றிபெற்று எம்எல்ஏ ஆவது உறுதி என்றும் கூறினார்.

அரசியலில் களமிறங்கிய உதயநிதி
உதயநிதி அரசியலுக்கு வரமாட்டார் என்று கூறிய ஸ்டாலின், தனது மகனின் ரசிகர் மன்றத் தலைவரும், நண்பருமான மகேஷ் பொய்யாமொழியை எம்.எல்.ஏவாக்கி அழகு பார்க்க நினைக்கிறார். மகேஷ் பொய்யாமொழி ஜெயித்தாலும் அது உதயநிதி ஜெயித்தது போலத்தான் ஸ்டாலினுக்கு தெரியாதா என்ன?












Click it and Unblock the Notifications