நான் ஸ்கூல் படித்த காலம் முதல் இதைத்தான் கூறுகிறார்.. ரஜினியை மறைமுகமாக தாக்கும் உதயநிதி
வடலூர்: நான் பள்ளியில் படித்த காலத்திலிருந்தே அரசியலுக்கு வருவதாக ஒரு நடிகர் கூறி வருகிறார் என ரஜினிகாந்தை உதயநிதி ஸ்டாலின் மறைமுகமாக சாடினார்.
நடிகரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் வடலூரில் ஒரு விழாவில் கலந்து கொண்டார். அங்கு அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில் அரசியலுக்கு வருவதாக எனது பள்ளிக்காலத்தில் இருந்தே நடிகர் ஒருவர் கூறி வருகிறார் என உதயநிதி ஸ்டாலின் நடிகர் ரஜினியை மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார். அரசியலுக்கு வருவதாக கூறும் நடிகர் குறித்து கவலைப்பட தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

திமுக
ரஜினிகாந்தை அண்மைக்காலமாக உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்து வருகிறார். திமுகவில் எத்தனையோ தலைவர்கள் இருக்க அவர்களை எல்லாம் விட்டுவிட்டு ரஜினிகாந்திற்கு உதயநிதியை பதிலளிக்க வைத்துள்ளார்கள். இதற்கு காரணம் ரஜினிகாந்த் ஒரு நடிகர் என ஸ்டாலின் ஏற்கெனவே கூறிவிட்டார். எனவே நடிகருக்கு நடிகர் பதில் அளிப்பது போதுமானது என திமுக கருதுவது போல் தெரிகிறது.

திமுககாரன்
துக்ளக் பத்திரிகையின் பொன் விழாவின் போது சென்னையில் நடந்த விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில் முரசொலி வைத்திருந்தால் தி.மு.கவினர் என சொல்லிவிடலாம். ஆனால் துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி' என்று தெரிவித்தார். இதற்கு உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்கையில் முதல்வர்னா முத்தமிழறிஞர், தலைவன்னா புரட்சித் தலைவன், தைரியலெட்சுமினா அம்மா-கால்நூற்றாண்டாக கால்பிடித்து காலம்கடத்தி ‘தலைசுத்திருச்சு' என நிற்கும் காரியக்காரருக்கு மத்தியில், முரசொலியை கையிலேந்தி, பகுத்தறியும் சுயமரியாதைக்காரனே திமுகக்காரன். நான் திமுகக்காரன். பொங்கல் வாழ்த்துகள் என்றார்.

மன்னிப்பு கேட்க மாட்டேன்
இதைத் தொடர்ந்து அதே விழாவில் பேசிய ரஜினிகாந்த் பெரியாரின் சேலம் மாநாடு குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என பெரியார் அமைப்புகள் போராட்டம் நடத்தின. இதற்கு சென்னையில் அவரது வீட்டில் பதிலளித்த ரஜினி, நான் எந்த தவறையும் செய்யவில்லை. மன்னிப்பு கேட்கமாட்டேன் என்றார்.

கருத்து
பெரியார் பிரச்சினை பற்றி எரிந்த போதும் உதயநிதி ஸ்டாலின் தனது கருத்தை பதிவு செய்தார். அவர் கூறுகையில் இப்படித்தான் தெரியாத விஷயத்தை பேசி மாட்டிக் கொள்கிறார். விரைவில் மன்னிப்பு கேட்பார் என உதயநிதி கூறியிருந்தார். அது போல் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரஜினி ஆதரித்து பேசினார். இதற்கு கண்டனம் தெரிவித்த உதயநிதி ஸ்டாலின் நடிகராக இருப்பதால் ரஜினிக்கு அரசியல் தெரியவில்லை. அவர் முதலில் கட்சி தொடங்கி கொள்கைகளை அறிவிக்கட்டும். அதன்பின்னர் அவரது கருத்துக்கு பதில் கூறுகிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications