சனாதன ஒழிப்பு பேச்சு.. மாலிக்காபூர், முகலாயர்களுடன் உதயநிதியை கோர்த்துவிட்டு அண்ணாமலை ஆவேசம்
ஶ்ரீரங்கம்: மாலிக்காபூர் உள்ளிட்ட முகலாயர்களால் ஒழிக்க முடியாத சனாதன தர்மத்தை தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் ஒழித்துவிட முடியுமா? என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
ஶ்ரீரங்கத்தில் பாதயாத்திரை நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசியதாவது: என் மண் என் மக்கள் யாத்திரையில் 100-வது தொகுதி, அரங்கநாத பெருமாள் இருக்கிற ஶ்ரீரங்கம் தொகுதியில் நடைபெறுகிறது. அரங்க பெருமாளின் உத்தரவு 100-வது தொகுதியாக இங்கே வரவேண்டும் என்பதாக இருக்கிறது. இயற்கையாகவே 5 தொகுதிகளை ஒத்திவைத்து 100-வது தொகுதியாக அரங்க பெருமானின் மண்ணுக்கு வர வேண்டும் என அவர் முடிவு செய்துள்ளார்.

108 திவ்ய தேசங்களில் முதன்மையானது ஶ்ரீரங்கம். எல்லா பெருமாளுக்கும் பெரிய பெருமாளாக இருக்கக் கூடியவர் அரங்க பெருமாள். 99 தொகுதிகளில் இது போல கசக்கி பிழிந்து மேடைக்கு வரவில்லை. அவ்வளவு அன்பை காட்டி இருக்கிறீர்கள். பஞ்ச பூத தலங்களில் ஒன்றான திருவானைக்காவலில் ஆரம்பித்து நடந்து ஶ்ரீரங்கத்துக்கு வந்துள்ளோம். தமிழகத்தில் சைவமும் வைணவமும் ஒற்றுமையோடு இருந்து சனாதன தர்மத்தைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. இந்த யாத்திரையும் சைவ தலத்தில் தொடங்கி வைணவ தலத்தில் முக்கியமான ஶ்ரீரங்கத்தின் காலடியில் நாம் நின்று கொண்டிருக்கிறோம்.
இன்றைக்கு தமிழக அரசியல்வாதிகள் சனாதன தர்மத்தை முற்றிலும் ஒழித்துவிடுவோம்; அகற்றிவிடுவோம் என்றெல்லாம் பேசுகின்றனர். தமிழகத்தில் திமுக என்கிற தீய சக்தி, இந்து தர்மத்தை, சனாதன தர்மத்தைப் பின்பற்ற விடமாட்டோம் என பல புதிய யுக்திகளை கடைபிடித்து கொண்டிருக்கின்றனர்.

13-ம் ஆம் நூற்றாண்டில் மாலிக்காபூர் ஒவ்வொரு கோவிலாக கொள்ளையடித்துக் கொண்டு ஶ்ரீரங்கம் வந்து நம் பெருமாளின் மீது கையை வைக்க முயற்சித்தனர். அப்போது 12,000 வைணவர்கள் தங்களது உயிரைக் கொடுத்து இந்த மண்ணில் ரத்தத்தை சிந்தி காப்பாற்றிய பெருமாள் ஶ்ரீரங்கத்தில் இருக்கிறார். கர்ப்பகிரகத்தில் இருக்கிற நம்பெருமான் 48 ஆண்டுகாலம் காப்பாற்றப்பட்டு அப்படையெடுப்பு முடிந்த பிறகு மறுபடியும் ஶ்ரீரங்கம் வந்து நம்பெருமான் கம்பீரமாக அமர்ந்தார். அந்த மாலிக்கபூரால் ஒழித்து கட்ட முடியாத சனாதன தர்மத்தை உதயநிதி ஸ்டாலின் ஒழித்து கட்டி விடுவாரா? உலுக்கானால் ஒழித்து கட்ட முடியாத சனாதன தர்மத்தை உதயநிதி ஸ்டாலின் ஒழித்து கட்டி விடுவாரா? முகலாயர்களால் ஒழித்து கட்ட முடியாத சனாதன தர்மத்தை திமுக என்கிற கட்சி ஒழித்துவிடுமா? இவ்வாறு அண்ணாமலை பேசினார்.












Click it and Unblock the Notifications