அமைச்சர் காந்தி காட்டிய பிடிவாதம்! தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு வந்த உதயநிதி! பின்னணி என்ன?
ராணிப்பேட்டை: படப்பிடிப்பு பணிகள் காரணமாக வெளிமாநிலத்தில் இருந்த திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் காந்தி காட்டிய பிடிவாதத்தால் தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு ராணிப்பேட்டையில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டார்.
தாம் வரமுடியாத சூழலை அமைச்சர் காந்தியிடம் தெரிவித்த போதும், தன்னை கட்டாயம் வர வேண்டும் என அவர் அன்புக்கட்டளை போட்டதால் அதை மீறமுடியவில்லை என அந்த நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
தமிழகத்தில் அரசு சார்பில் இதுவரை 35 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ள தகவலையும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் பிறந்தநாள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 69-வது பிறந்தநாளை முன்னிட்டு ராணிப்பேட்டையில் பிரம்மாண்ட வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதனை ஏற்பாடு செய்த கதர்வாரியத்துறை அமைச்சர் காந்தி, 15 நாட்களுக்கு முன்பே இதற்காக திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினிடம் தேதி கேட்டு வாங்கிவிட்டார். ஆனால் எதிர்பாராத விதமாக புதிய படப்பிடிப்பு பணிகள் காரணமாக வெளிமாநில பயணம் செல்ல வேண்டிய சூழல் உதயநிதிக்கு ஏற்பட்டிருக்கிறது.

அமைச்சர் காந்தி
இதையடுத்து அமைச்சர் ராணிப்பேட்டை ஆர்.காந்தியை தொடர்பு கொண்ட உதயநிதி ஸ்டாலின், கோபித்துக்கொள்ள வேண்டாம், தன்னால் வேலைவாய்ப்பு முகாம் நிகழ்ச்சியில் பங்கேற்க இயலாது என்றும் ஆனால் நிகழ்ச்சியை நல்லபடியாக நீங்கள் நடத்துங்கள் எனவும் தெரிவித்திருக்கிறார். இதை துளியும் ஏற்காத அமைச்சர் காந்தி, தம்பி நீங்க வந்தே ஆகனும், இல்லையென்றால் நிகழ்ச்சியே நடத்த முடியாது என அன்புக்கட்டளை போடும் விதமாக பிடிவாதம் காட்டியிருக்கிறார்.

நிகழ்ச்சிகள் ரத்து
இதனால் வேறு வழியின்றி தமது நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்துவிட்டு ராணிப்பேட்டை வந்து அமைச்சர் காந்தி ஏற்பாடு செய்திருந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டார் உதயநிதி ஸ்டாலின். அந்த விழாவில் பேசிய உதயநிதி, அமைச்சர் காந்தி பார்க்கத்தான் மிரட்சியான தோற்றத்தில் இருப்பாரே தவிர அவர் கள்ளம் கபடமற்ற மனதுக்கு சொந்தக்காரர் என்றும் எதையும் மனதில் வைக்காமல் ஒளிவு மறைவின்றி பேசக்கூடியவர் எனவும் புகழாரம் சூட்டினார்.

வேலை வாய்ப்பு முகாம்
இதுவரை 35 வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் 36 வது வேலை வாய்ப்பு முகாமை சென்னையில் உள்ள தனது சொந்த தொகுதியான சேப்பாக்கத்தில் நடத்தி கொடுக்குமாறும் அமைச்சர் கணேசனிடம் கேட்டுக்கொண்டார். இதனிடையே ராணிப்பேட்டையில் 800-க்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு முகாம் மூலம் பணி வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications