உடுமலைப்பேட்டை ஜாதி வெறிக் கொலை.... திராவிடக் கட்சிகளுக்கு ஏற்பட்ட தோல்வி.. தமிழிசை
தஞ்சாவூர்: உடுமலைப்பேட்டையில் பட்டப் பகலில் நடந்துள்ள ஜாதி வெறி கெளரவக் கொலையானது, தமிழகத்தை இதுகாலம் வரை ஆண்டு வரும் திராவிடக் கட்சிகளுக்குக் கிடைத்த பெரும் தோல்வி என்று தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.
உடுமலைப்பேட்டையில் தலித் வாலிபர் சங்கர் என்பவரை அவர் காதலித்து மணம் புரிந்த கவுசல்யாவின் குடும்பம் ஏவிய கூலிப்படையினர் மிகக் கொடூரமாக பட்டப் பகலில் வெட்டிக் கொலை செய்து விட்டுத் தப்பிய செயல் அனைவரையும் பதற வைத்துள்ளது.

இந்த ஜாதி வெறி கெளரவக் கொலையில் கவுசல்யாவும் காயமடைந்துள்ளார். இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில், உடுமலைப்பேட்டைக் கொலைச் சம்பவம் பெரும் வருத்தம் அளிக்கிறது.
திமுக, அதிமுக ஆகிய இரு பெரும் திராவிடக் கட்சிகள் கூறி வரும் சமூக நீதிப் போராட்டம் எது என்று தெரியவில்லை. அவர்களின் சமூக நீதிப் போராட்டம்தான் எது? இரு திராவிடக் கட்சிகளுக்கும் கிடைத்துள்ள பெரும் தோல்வி உடுமலைப்பேட்டை படுகொலை.
திமுக காங்கிரஸ் கூட்டணி மக்களார் ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட கூட்டணி. லோக்சபா தேர்தலின்போது நிராகரித்த மக்கள் வரும் சட்டசபைத் தேர்தலிலும் அவர்களை நிராகரிப்பார்கள் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications