அன்புள்ள நண்பா.. ஹேப்பி பொங்கல்டா.. அந்தக் காலமெல்லாம் போயே போச்!
சென்னை: பண்டிகைக் காலம் வந்தாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மகிழ்ச்சி தான். நாம் மகிழ்வதோடு மட்டும் நில்லாமல் நம்முடைய உறவுகளையும் நண்பர்களையும் மகிழ்ச்சிப் படுத்துவதில் இருக்கும் சுகம் அலாதியானது.
புத்தாண்டு பொங்கல் தீபாவளி கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை நாட்களில் வாழ்த்து அட்டைகளைப் பரிமாறிக் கொள்வது வழக்கம். 90ஸ் கிட்ஸ்க்குத் தெரியும். ஆனால் கடந்த இருபது வருடங்களாக சமூக வலைதளங்களின் ஆக்கிரமிப்பால் வாழ்த்து அட்டைகள் பரிமாறிக் கொள்வதுக் குறைந்து விட்டது.
பொங்கல் பண்டிகைக்குப் பத்து நாட்களுக்கு முன்பே வாசலில் தபால்காரரை எதிர்பார்த்துக் காத்திருந்து அவர் கொண்டு வரும் கடிதங்களில் நமக்கு ஒரு வாழ்த்து அட்டையாவது வந்திருக்காதா என்று ஏக்கத்தோடு காத்திருந்த நாட்கள் உண்டு.
புதுப் புது டிசைன்களில்
வண்ண வண்ண காகிதங்களில் புதுப் புது டிசைன்களில் நடிகர் நடிகையர் படம் குழந்தைகள் படம் இயற்கைக்காட்சிகள் அடங்கிய படம் புத்தாண்டு வாழ்த்து அட்டை பொங்கல் படம் கிறிஸ்துமஸ் படங்கள் என விதவிதமாக வாழ்த்து அட்டைகளை பல கடைகளில் தேடித் தேடி நம்முடைய உறவுகளுக்காகப் பார்த்துப் பார்த்து வாங்கி வருவோம்.
மனசில் உள்ளதை
வாங்கி வந்த அட்டைகளில், சில வாழ்த்து வரிகளோ அல்லது கவிதைகளோ படங்களோ வரைந்து நம் கையெழுத்தில் எழுதும் சுகமே தனி தான். அந்த அட்டைகளின் வண்ணங்களுக்கேற்ப அஞ்சல் உறைகள் வாங்கி அதைப் போட்டு அஞ்சல் அனுப்பி விட்டு வரும் மகிழ்ச்சி இக்காலத் தலைமுறையினருக்குத் தெரியாது.
வாட்ஸப் வாழ்த்து
இன்று வாட்ஸப், இமெயில்,பேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் வாழ்த்துகளை ஒரு வரியில் அனுப்பி விட்டு அதோடு கடமை முடிந்தது என சென்று விடுகிறோம்.கைப்பேசியில் குறுஞ்செய்தி அனுப்பும் முறை வந்ததிலிருந்தே வாழ்த்து அட்டைகளின் அழிவு ஆரம்பமாகி விட்டது. வாழ்த்து அட்டைகள் யாருக்கு அதிகமாக வந்திருக்கிறது என்று கணக்கெடுப்பு நடத்திய நாட்களும் உண்டு. அவ்வாறு அதிகமாக வாழ்த்து அட்டைகள் கிடைத்தவர் மிகவும் செல்வாக்கு உடைய நபராகக் கருதப்படுவார்.
கைப்பட எழுதி
வாழ்த்து அட்டைகளை நாமே தயாரித்து அனுப்பினால் இன்னும் எவ்வளவு அழகாக இருக்கும். பொங்கல் பானை, கரும்பு,மஞ்சள், சூரிய பகவான்,இயற்கைக் காட்சிகள் போன்றவற்றை நம் கைகளால் வரைந்து வண்ணமிட்டு நம் உறவுகளுக்கு அனுப்பும் போது ஏற்படும் இன்பத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
அது பெருமை
அவ்வாறு அனுப்பிய வாழ்த்து அட்டைகளை எடுத்துக் கொண்டு பார்த்தீர்களா எனக்கு எவ்வளவு வாழ்த்து அட்டைகள் வந்துள்ளது என்றும் அதில் இருக்கும் வண்ண வண்ணப் படங்களைக் காட்டி நம் உறவுகளும் நண்பர்களும் நமக்கு அனுப்பியதை நாம் பெருமையடித்துக் கொள்வோம்.பெரியவர்கள் சாமிப் படங்களை வாங்கித் தன் சொந்த பந்தங்களுக்கு அனுப்புவார்கள்.
செல்வாக்கு
ஒரு காலத்தில் பன்னாட்டு நிறுவனங்களே தன்னிடம் வேலை செய்பவர்களுக்கு வாழ்த்து அட்டைகள் வழங்கி மகிழ்ந்தது. அவ்வளவு செல்வாக்கா வாழ்த்து அட்டைகளுக்கு என்று நீங்கள் கேட்கும் கேள்வி என் காதில் விழுகிறது. ஆமாம். அது வெறும் வாழ்த்து அட்டைகள் அல்ல உறவுகளின் உணர்ச்சிகள் கலந்த அன்பு அந்த வாழ்த்து அட்டையைப் பார்க்கும் போதெல்லாம் அந்த நபர் நம்முடனே இருப்பது போன்ற மகிழ்ச்சி. ஆனால் இன்று தொலைபேசி வந்தவுடன் குறுஞ்செய்தியில் வாழ்த்து,இமெயிலில் வாழ்த்து,வாட்ஸப், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் வாழ்த்து இப்படி இன்றைய வாழ்த்துகள் நிமிட நேரங்களில் முடிந்து விடுகின்றன.
சுகமானது
வாழ்த்து அட்டை வாங்க நேரம் செலவிடுவதும் பணம் செலவிடுவதும் மிச்சம் ஆனால் அதில் இருக்கும் சுகங்கள் இதில் இருக்கிறதா என்றால் இல்லை என்பதே நிதர்சனம்.
வாழ்த்து அட்டைகள் என்பது வெறும் அட்டை அல்ல உறவுகளின் பாலம்
அதில் இருக்கும் வார்த்தைகள் அன்பு மிகுந்தவை
வாழ்த்து அட்டைகள் நம் வாழ்க்கையின் பொக்கிஷங்கள்
மறக்க ஆரம்பிச்சாச்சு
ஆனால் இன்றைய தலைமுறையினர் அதை மறந்து வருகின்றனர். இப்படியே போனால் நம் குழந்தைகளுக்கு வாழ்த்து அட்டை என்றால் என்ன அதை எதற்காகக் கொடுக்கிறோம் என்று தெரியாமலே போகலாம். இதை அருங்காட்சியகத்தில் பார்க்கும் காலம் வந்தாலும் இதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. நாம் அனுபவித்த சந்தோஷத்தை நம் மக்கள் உணர வேண்டாமா. அதனால் நம் பிள்ளைகளுக்கும் வாழ்த்து அட்டைகளை அனுப்பட்டும்.அழகு அழகான வாழ்த்து அட்டைகளின் மூலம் நம் உறவுகளை இன்னும் பலப்படுத்திடுவோம்.
- ஜி. உமா மகேஸ்வரி