இந்தியா வளர்ச்சி அடையும்போது தமிழகம் முன்னிலை பெறும் -மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
நாகர்கோவில் : இந்தியா வளர்ச்சி பெறும் போது தமிழகமும் முன்னிலை பெறும் என்று மத்திய சாலை, கப்பல் போக்குரவத்துத் துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதற்காக மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த போது பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது..

பிரதமர் நரேந்திரமோடி நாட்டின் வளர்ச்சிக்காக, எதிர்கால முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். நெசவாளர்களின் வாழ்வில் ஒளியேற்ற ஆகஸ்டு 7-ந் தேதியை நெசவாளர் தினம் என அறிவித்து விழா எடுத்து அவர்களை கவுரவித்தார்.
வழக்கமாக இத்தகைய விழாக்கள் டெல்லியில் தான் நடைபெறும். ஆனால் தற்போது முதன்முறையாக இந்த விழா சென்னையில் நடத்தப்பட்டு நெசவாளர்கள் கவுரவிக்கப்பட்டு உள்ளனர். இது நெசவாளர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் ஆகும்.
சென்னை வந்த பிரதமர் மோடி, முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார். அவர்கள் மாநிலத்தின் வளர்ச்சி திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசி இருப்பார்கள் என கருதுகிறேன்.
இந்தியா வளர்ச்சி அடையும்போது தமிழகம் முன்னிலை பெற வேண்டும். அதற்காக மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். அந்த வகையில் மாநில அரசு பல்வேறு விஷயங்களில் இன்னும் அதிகம் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பது தான் பாரதிய ஜனதா கட்சியின் எண்ணம். இதற்காக வருகிற 10-ந்தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போராட்டங்கள் நடக்க உள்ளது. மது ஒழிப்பை வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து போராடி வருகிறது.
மார்த்தாண்டம் உண்ணாமலைக்கடையில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி நடந்த போராட்டத்தில் சசிபெருமாள் மரணம் அடைந்துள்ளார். 5 மணி நேரம் செல்போன் கோபுரத்தின் உச்சியில் நின்று போராடிய அவரை காப்பாற்ற அதிகாரிகள் யாரும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அதிகாரிகள் நினைத்து இருந்தால் அவரை காப்பாற்றி இருக்கலாம். எங்களிடம் வலைகள் இல்லை என்று அதிகாரிகள் கூறியதாக தெரிகிறது.
குமரி மாவட்டத்தில் மீனவர் தோழர் பலர் உள்ளனர். அவர்களிடம் கேட்டிருந்தால் வலைகள் கிடைத்து இருக்கும். பல வலைகளை ஒன்றிணைத்து அவரை காப்பாற்றி இருக்கலாம். அதை செய்யவில்லை. இதை பாரதிய ஜனதா கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
சசிபெருமாளின் மரணத்தை தற்கொலை வழக்காக பதிவு செய்து இருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். சசிபெருமாள் தற்கொலை செய்தார் என்று கூறிய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீது மான நஷ்ட வழக்கு தொடருவார்கள் என்று நம்புகிறேன்.
இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.












Click it and Unblock the Notifications