நெல்லையில் வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சல் – பீதியில் பொதுமக்கள்
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மருத்துவமனையை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
வடகிழக்கு பருவமழை குறித்த காலத்தில் பெய்ததால் நெல்லை மாவட்டத்தில் இந்தாண்டு குறித்த காலத்தில் ஓரளவுக்கு மழை பெய்து வருகிறது. மழை காரணமாக பெரும்பாலான நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன.
இந்த நிலையில் அதற்கு நேர்மாறாக நோய்களும் வேகமாக பரவி வருகின்றன. குழாய், கால்வாய்களில் நீரவரத்து அதிகம் காரணமாக கொசுக்கள் பெருகி பொதுமக்களை பெரிதும் பாதித்து வருகிறது.
மழைக்கான நோய்களை தடுப்பதற்கான போதிய சுகாதார பணியாளர்களும், அதிகாரிகளும் தற்போது இல்லை என்று கூறப்படுகிறது. சுகாதார துறையில் ஊழியர்கள் பற்றாக்குறையால் டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஎஸ் கொசுவை அழிக்க டெமிபாஸ் மருந்து அடிப்பது, கழிவு நீர் குட்டைகளை மழை காலத்தில் சுத்தமாக வைத்திருப்பது. கொசு மருந்து அடிப்பது உள்ளிட்ட பணிகள் தேக்கம் அடைந்துள்ளன.
இந்த நிலையி்ல் வைரஸ் மற்றும் விஷகாய்ச்சலால் மருத்துவமனையில் நோயாளிகள் கூட்டம் அலைமோதி வருகிறது. விஷக்காய்ச்சலை தடுக்க மழை காலத்தில் ஆண்டுதோறும் நெல்லை அரசு சித்த மருத்துவமனையில் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
குறிப்பாக சித்த மருத்துவமனை சார்பில் அங்காஙகே நிலவேம்பு கசாயம் இலவசமாக வழங்கப்படும். மக்கள் நெருக்கடி மிகுந்த பேட்டை, மேலப்பாளையம் மற்றும் பஸ் நிலையங்கள், ரயில் நிலைய பகுதிகளில் முகாம்கள் அமைத்து நிலவேம்பு கசாயம் இலவசமாக வழங்கப்படும்.
மேலும் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வருபவர்களுக்கும் இலவசமாக இவை வழங்கப்படும். ஆனால் இந்தாண்டு இதுவரை வழங்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பலர் மருத்துவமனையில் முடங்கி கிடக்கின்றனர்.












Click it and Unblock the Notifications