சென்னையில் பட்டப் பகலில் பகீர்... துப்பாக்கி முனையில் வங்கியில் பணத்தை பறித்த வட இந்திய கொள்ளையன்!
சென்னை அடையாறில் செயல்பட்டு வரும் இந்தியன் வங்கியில் துப்பாக்கி முனையில் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை போலீசார் மடக்கிப் பிடித்துள்ளனர்.
Recommended Video
சென்னை: சென்னை அடையாறில் செயல்பட்டு வரும் இந்தியன் வங்கியில் மர்ம நபர் ரஒருவர் துப்பாக்கி முனையில் வாடிக்கையாளரிடம் இருந்து ரூ. 6 லட்சம் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பணத்துடன் தப்பியோட முயன்ற நபரை போக்குவரத்து காவல்துறையினர் மடக்கிப் பிடித்ததையடுத்து அந்த நபரிடம் சாஸ்திரி நகர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாரத்தின் முதல் நாள் என்பதால் சென்னை அடையாறில் உள்ள இந்தியன் வங்கியில் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தவும் எடுக்கவும் வரிசையில் காத்திருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த மர்மநபர் ஒருவர் துப்பாக்கியை காட்டி அனைவரையும் மிரட்டியுள்ளார். வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை துப்பாக்கியை காட்டி மர்ம நபர் மிரட்டியுள்ளார்.
மேலும் வாடிக்கையாளர் ஒருவரிடம் இருந்து ரூ. 6 லட்சம் பணத்தை பறித்துக்கொண்டு வெளியே ஓட முயன்றுள்ளார். இதனையடுத்து வாடிக்கையாளர்கள் மற்றும் வங்கியில் பாதுகாப்புப் பணியில் இருந்தவர்கள் அவரை பிடிக்க முயன்றபோது துப்பாக்கியை காட்டி மிரட்டி வங்கியில் இருந்து வெளியே வந்திருக்கிறார்.
இதனையடுத்து வங்கி அதிகாரிகள் சென்னை சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். சட்டம் ஒழுங்கு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்னரே அந்தப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவல்அதிகாரியிடம் ரூ. 6 லட்சம் பணத்துடன் தப்பியோடிய நபர் சிக்கியுள்ளார்.
இதனையடுத்து அவரை மடக்கிப் பிடித்த போலீசார் பணத்தை பறிமுதல் செய்ததோடு அவரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பிடிபட்ட மர்ம நபரிடம் சாஸ்திரி நகர் போலீசார் விசாரணை நடத்தினர். வடமாநிலத்தை சேர்ந்த அந்த இளைஞருடன் தங்கி இருந்த நபர்கள் 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். பிடிபட்ட வங்கிக்கொள்ளையன் வைத்திருந்த கைத்துப்பாக்கிகள் பீகார் மாநிலத்தில் இருந்து வாங்கி வரப்பட்டதாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.