எதிர்க்கட்சி அந்தஸ்துக்காக தாஜா.. 3 தென்மாநில ஆளுநர்களை ராஜினாமா செய்ய சோனியா உத்தரவு!!
சென்னை: தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களின் ஆளுநர்களை உடனடியாக ராஜினாமா செய்ய காங்கிரஸ் தலைவர் சோனியா வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசுடன் இணக்கமான போக்கை கடைபிடித்து எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெறுவதற்காகவே காங்கிரஸ் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
மன்மோகன் சிங் ஆட்சியில் நியமிக்கப்பட்ட ஆளுநர்களை மாற்ற மோடி அரசு திட்டமிட்டுள்ளது. ஆளுநர்கள் தாங்களாகவே ராஜினாமா செய்ய உள்துறை செயலர் கோஸ்வாமி வலியுறுத்தியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
மத்திய அரசின் நிர்பந்தத்தை அடுத்து முதலில் உத்தரபிரதேச ஆளுநர் பி.எல். ஜோஷி ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து சத்தீஷ்கார் மாநில ஆளுநர் சேகர் தத் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார்.

மத்திய அரசு நெருக்கடி
தாங்களாகவே விலகாத ஆளுநர்களுக்கு மத்திய அரசு நெருக்கடி தந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விஷயத்தில் பிரதமர் அலுவலகம் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் ஆகியவை கடும் நெருக்கடியை அளித்து வருகின்றன. ஆனால் காங்கிரஸ் கட்சி இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.

5 மாநில ஆளுநர்களுக்கு நெருக்கடி
மேலும் மேற்குவங்கம், கேரளா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய 5 மாநில ஆளுநர்களையும் பதவி விலக வலியுறுத்துகிறது மத்திய அரசு.

விலக மறுப்பு
ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய முடியாது என்பது கேரள ஆளுநர் ஷீலாதீட்சித் முடிவாகும். அஸ்ஸாம் மாநில ஆளுநர் பட்நாயக், கர்நாடகா மாநில ஆளுநர் பரத்வாஜ் ஆகியோரும் ராஜினாமா செய்ய மறுத்துவிட்டனர்.

காங்கிரஸ் அதிரடி முடிவு
இந்த நிலையில் தமிழக ஆளுநர் ரோசய்யா, கேரளாவின் ஷீலா தீட்சித், கர்நாடகாவின் பரத்வாஜ் ஆகியோரை உடனே ராஜினாமா செய்யுமாறு திடீர் என உத்தரவிட்டுள்ளார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் இம் மூன்று பேரும் எந்நேரத்திலும் தங்களது பதவியை ராஜினாமா செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாற்றத்திற்கு காரணம் என்ன?
காங்கிரஸின் இந்த திடீர் நிலைப்பாட்டுக்கு காரணமாக சொல்லப்படுவது எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து பதவிதான் என்று கூறப்படுகிறது. அதாவது லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெறும் 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை பெற முடியாமல் போராடி வருகிறது காங்கிரஸ்.

எதிர்கட்சி அந்தஸ்து
எனினும் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து அளிக்குமாறு மக்களவை தலைவர் சுமித்ரா மகாஜனுக்கு சோனியா காந்தி கடிதம் எழுதியதாக கூறப்பட்டது.

காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி
எதிர்க்கட்சி அந்தஸ்தை கருத்தில் கொண்டு ஆளுநர்கள் விசயத்தில், மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தக்கூடாது என்று கருதிய சோனியா காந்தி, ஆளுநர்களை ராஜினாமா செய்யுமாறு உத்தரவிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications