மயிலாடுதுறையில் ஒரு வார்டில் மட்டும் உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைப்பு.. காரணம் இதுதான்
மயிலாடுதுறை: மயிலாடுதுறை நகராட்சி 19-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் உயிரிழந்ததால் தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வரும் வரும் சனிக்கிழமை (பிப். 19) ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து பிப்ரவரி 22இல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்தப்பட உள்ளது.

மயிலாடுதுறை தருமபுரம் சாலையைச் சேர்ந்தவர் ஜெயராமன் மனைவி அன்னதாட்சி (64). இவர் மயிலாடுதுறை நகராட்சி 19-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இன்று காலை அன்னதாட்சி அதிமுக தொண்டர்களுடன் வழக்கம் போல வாக்கு சேகரித்துள்ளார். இன்று தை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை என்பதால் அன்னதாட்சி காலை உணவு சாப்பிடாமல் விரதம் இருந்துள்ளார்.
அதைத் தொடர்ந்து மதியம் உணவு அருந்திய அவர், மாலை சின்னமாரியம்மன் கோவிலில் நடந்த குத்து விளக்குப் பூஜையில் கலந்து கொண்டார். அப்போது அன்னதாட்சிக்கு லேசான மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அன்னதாட்சி சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்குப் பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தார்.
அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் வேட்பாளர் உயிரிழந்த காரணத்தால், மயிலாடுதுறை நகராட்சி 19-வது வார்டில் மட்டும் தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக நகராட்சி தேர்தல் அதிகாரியான மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் பாலு அறிவித்துள்ளார். அடுத்து வாக்குப்பதிவு எப்போது நடைபெறும் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications