கடலில் கொட்டிய எண்ணெய்.. வாளியால் அள்ளும் வல்லரசு.. கலாய்க்கும் நெட்டிசன்கள்
கப்பல்கள் மோதியதால் கடலில் கொட்டிய எண்ணெய்யை பெயிண்ட் வாளியால் அள்ளும் வல்லரசு என்று நெட்டிசன்கள் கலாய்த் வருகின்றனர்.
சென்னை: எண்ணூர் காமராஜர் துறைமுகம் அருகே இரண்டு கப்பல்கள் மோதிக் கொண்டன. இதனால் கடலில் கொட்டிய டீசல் எண்ணூர் முதல் திருவான்மியூர் வரை பரவிக் கிடக்கிறது. கடலில் கலந்துள்ள டீசலை பெயிண்ட் வாலியால் அகற்றி வருகின்றனர்.
சென்னை அடுத்த எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் கடந்த 27ம் தேதி மும்பையில் இருந்து டீசல் ஏற்றிக் கொண்டு எண்ணூரை நோக்கி வந்த டான் காஞ்சீபுரம் என்ற கப்பல் மீது ஈரான் கப்பல் ஒன்று மோதியது.
இதில் மும்பையில் இருந்து டீசலை ஏற்றிக் கொண்டு வந்த கப்பல் சேதமடைந்து, டீசல் கடலில் கொட்டியது. இந்த டீசல் எண்ணூர் முதல் திருவான்மியூர் வரை பரவியது. டன் கணக்கில் கொட்டப்பட்ட எண்ணெய்யை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

பெயிண்ட் வாளி
கடலோர காவல்படையினர் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு பணியாளர்கள், அதிகாரிகள், அந்ததந்த பகுதியில் வசிக்கும் மீனவர்கள் ஆகியோர் கடலில் கலந்துள்ள எண்ணெய்யை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கொட்டிய எண்ணெய்யை முறையான கருவிகள் கொண்டு அகற்றப்படாமல் பெயிண்ட் வாளிகள் உள்ளிட்ட வீட்டில் கிடைக்கும் பொருட்களை வைத்தே எண்ணெய் அப்புறப்படுத்தப்படுகிறது.

நையப் புடைக்கும் நெட்டிசன்கள்
இப்படி பெயிண்ட் வாளியால் எண்ணெய் அகற்றப்படுவதை சமூக வலைதளங்களில் தமாஷ் செய்து வறுத்தெடுத்து வருகிறார்கள் நெட்டிசன்கள். முறையான நவீன கருவிகள் கூட இல்லாமல் வாளிகள் மூலம் எண்ணெய் அகற்றும் வல்லரசு என்று கிண்டல் அடித்து வருகின்றனர். ஆனால் கழிவு நீர் உறிஞ்சும் எந்திரங்கள் மூலம் எண்ணெய் அகற்றப்பட்டு வருவதாக சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. ஆனால், எண்ணெய்யை கையால் அகற்றப்படும் காட்சிகள்தான் வெளியாகி வருகிறது.

பாதுகாப்பு உபகரணம் இல்லை
டீசலை அகற்றும் பணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கான உரிய முறையான பாதுகாப்பு உபகரணமும் இல்லை. வெறும் கைகளிலேயே ஊழியர்களும், தன்னார்வலர்களாக செயல்படும் மீனவர்களும் டீசலை அகற்றி வருகின்றனர். இதனால் அவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து சமூக வலைதளங்களில் பரவலாக கேள்வி எழுப்பப்படுகிறது.

மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு
டீசல் கடலில் கலந்துள்ளதால் மீன்களை உண்ண மக்கள் விருப்பம் காட்டாமல் உள்ளதால் மீன் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்களும் கடலுக்குள் சென்று மீன் பிடியில் ஈடுபடாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். இதனால் அவர்களது வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அமைச்சர் ஜெயக்குமார் மீன் உணவுகளை சாப்பிடுவதற்கு அச்சப்பட தேவையில்லை என்று கூறினார். ஆனாலும் மக்கள் அதனை நம்பத் தயாராக இல்லாததால் மீன் விற்பனையாகாமல் கிடக்கிறது.

சுகாதார கேடு
கடற்கரையோரம் முழுவதும் டீசல் பரவியுள்ளதால் அந்தப் பகுதியில் வசிப்பவர்களுக்கு தோலில் ஒரு வித அரிப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதுபற்றி தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications