கெத்து காட்ட சசிகலா போட்டோ.. அதிமுக ஆபிஸ் பெட்டிக் கடையில் அமோக விற்பனை
சட்டை பாக்கெட்டில் வைத்துக் கொள்ளும் சிறிய அளவிலான சசிகலா போட்டோ ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகம் எதிரில் படுஜோராக விற்பனையாகி வருகிறது.
சென்னை: அதிமுகவின் பொதுச் செயலாளராக வி.கே. சசிகலா பொறுப்பேற்றதை அடுத்து சட்டைப் பக்கெட்டில் வைக்கும் அளவிலான அவரது புகைப்படம் ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தின் எதிர் உள்ள பெட்டிக் கடைகளில் படுஜோராக விற்பனை ஆகிவருகிறது.
அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா கடந்த 5ம் தேதி மரணம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற அதிமுக பொதுக் குழு கூட்டத்தில் ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா, அக்கட்சியின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மான நகலை தமிழக முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் சசிகலாவிடம் கொடுத்து சம்மதத்தைப் பெற்றார்.
இதனையடுத்து, நாளை சென்னை, ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலையில் உள்ள அதிமுக தலைமையகத்திற்கு நேரில் வந்து பொதுச் செயலாளர் பணியைத் தொடங்குவார் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அக்கட்சி அலுவலகத்தின் எதிர் உள்ள பெட்டிக் கடைகளில் பாக்கெட்டில் வைக்கும் படியான சசிகலாவின் போட்டோக்கள் விற்பனைக்கு வந்துள்ளன. ஜெயலலிதாவின் போட்டோக்கள் குறைக்கப்பட்டு சசிகலாவின் புகைப்படங்கள் அதிக அளவில் விற்றுவருகிறது. அதிமுக தொண்டர்கள் "சின்னம்மா" படம் கொடுங்கள் என்று கேட்டு வாங்கிச் செல்கின்றனர்.
இதுமட்டுமல்லாமல், சசிகலாவின் உருவம் உள்ள பேனாக்கள், சுவரில் மாட்டும் வகையிலான பெரிய போட்டோக்கள், மேசையில் வைக்கக் கூடிய வகையில் பிரேம் போட்ட போட்டோக்கள் என விற்பனைக்காக அணி வகுத்துள்ளன.
எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட கட்சி அலுவலகம் முன்பு எம்ஜிஆர் படங்கள் விற்பனைக்கில்லை. இறக்கும் வரை பொதுச் செயலாளராகவும், முதல்வராகவும் இருந்து மறைந்த ஜெயலலிதாவின் புகைப்படங்கள் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. பொதுச் செயலாளராக நேற்று பொறுப்பேற்ற சசிகலாவின் புகைப்படம் விற்பனையில் சக்கைபோடு போடுகிறது.
யார் பொறுப்பிற்கு வருகிறார்களோ அவரது படத்தை பாக்கெட்டில் வைப்பதுதானே கெத்து..