சசிகலா பதவியேற்பு இப்போது இல்லை.. சொல்கிறது ஓ.பி.எஸ். பெயரில் உள்ள டிவிட்டர் பக்கம்!
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா முதல்வராக இப்போது பதவியேற்க மாட்டார் என்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பெயரில் உள்ள டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தமிழக முதல்வராக சசிகலா பதவியேற்பது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் பெயரில் உள்ள டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளரான சசிகலா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இவர் 9ஆம் தேதிக்குள் முதல்வராக பதவியேற்பார் என தகவல் வெளியானது. இதற்கு பலரும் கண்டன கருத்துக்களைப் பதிவிட்டனர்.
|
சசிகலா பதவியேற்பு
7ஆம் தேதியான இன்றே முதல்வராக பதவியேற்கப் போவதாக ஓ.பன்னீர் செல்வம் பெயரில் உள்ள டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டது. பதவியேற்பு விழாவிற்கான பாதுகாப்புகளை கவனிக்க காவல்துறையினர் தயார் படுத்தப்பட்டனர்.
ஏற்பாடுகள் தயார்
சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் பதவியேற்பிற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வந்தன. இந்நிலையில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவின் தமிழக வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பதவியேற்பதில் பல சிக்கல்கள் உருவானது.
ஆளுநர் தயக்கம்
சசிகலா தமிழக முதல்வராக பதவியேற்க தடை விதிக்க வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் சட்டப் பஞ்சாயத்து இயக்கம் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருவதால் ஆளுநர் தயக்கம் காட்டி வருவதாக தெரிகிறது. மேலும், சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பும் ஒரு வாரத்தில் வெளியாவதால் சிக்கல் உருவாகலாம் என ஆளுநர் கருதுவதாக தகவல்கள் தெரிவித்தன.
|
பதவியேற்பு ஒத்திவைப்பு
இந்த நிலையில் சசிகலாவின் பதவியேற்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஓ.பன்னீர் செல்வத்தின் பெயரில் உள்ள டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. சசிகலா முதல்வராக பதவியேற்பது எப்போது என்று அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை.