பெரியார் வீட்டு அடிதானே... எதுவும் செய்யாது - ஈவிகேஎஸ் இளங்கோவனை புகழ்ந்த வைகோ
ஈரோட்டில் மாநாடு நடத்திய போது எனக்கு கறுப்பு கொடி காட்டி என்னை கடுமையாக திட்டியுள்ளார் ஈவிகேஸ் இளங்கோவன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
சென்னை: ஈவிகேஎஸ் இளங்கோவன் என்னை கடுமையாக திட்டினாலும் பெரியார் வீட்டு அடிதானே என்று பொறுத்துக்கொண்டேன் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் பிறந்தநாள் விழா சென்னை வேலப்பன்சாவடியில் இன்று நடைபெற்றது.
இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம், திமுக செயல்தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய வைகோ, 13 ஆண்டுகளுக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சியின் மேடையில் பேசுவதாக கூறினார்.
வைகோ புகழாரம்
ஈரோட்டில் மாநாடு நடந்த போது, ஈவிகேஎஸ் இளங்கோவன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் கறுப்புக்கொடி காட்டினர். அப்போது ஈவிகேஎஸ் இளங்கோவன் என்னை கடுமையாக திட்டினார். நானும் பெரியார் வீட்டு அடிதானே என்னை ஒன்றும் செய்யாது என்று பொறுத்துக்கொண்டேன் என்று கூறினார்.
மதவாத சக்தி
வைகோவின் பேச்சைக் கேட்டு மேடையில் இருந்த தலைவர்கள் சிரித்தனர். ஈவிகேஎஸ் இளங்கோவன்தான் கொஞ்சம் நெளிந்தார். 13 ஆண்டுகளுக்குப் பின்னர் நாங்கள் ஒன்றாக இணைந்திருக்கிறோம் என்றால் நாட்டை அச்சுறுத்தும் மதவாத சக்தியை எதிர்க்கவே என்று கூறினார்.
காங்கிரஸ் மேடையில் வைகோ
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 10 ஆண்டுகளுக்குப் பின்னர் திமுக மேடையில் பேசினார். ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்று கூறினார். இப்போது 13 ஆண்டுகளுக்குப் பின்னர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பிறந்தநாள் விழாவில் பங்கேற்று காங்கிரஸ் கட்சியோடு கரம் கோர்த்துள்ளார்.
புதிய கூட்டணி
கடந்த 2014ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் மோடி பிரதமராக வேண்டும் என்று ஆளுக்கு முதலாக ஆதரவு தெரிவித்தார். மோடியை பிரதமராக்கினார். பதவியேற்பு விழாவில் ராஜபக்சே பக்கேற்றார், இதற்காகவே அந்த விழாவை புறக்கணித்தார். கூட்டணியில் இருந்தும் வெளியேறினார். இந்த நிலையில் இப்போது காங்கிரஸ் கட்சியினர் மேடையில் பேசி புதிய கூட்டணிக்கு அச்சாரம் போட்டுள்ளார் வைகோ.