திமுகவை ஒழிக்க வேண்டும் என்று விஜயகாந்த் பேசியுள்ளாரே?.. கருணாநிதிக்குத் தெரியாதா??.. வைகோ கேள்வி!
சென்னை: தேமுதிக தேர்தல் அறிக்கையை வெளியிட்டு டிவிக்குப் பேட்டி அளித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், திமுகவும், அதிமுகவும் ஊழல் கட்சிகள். அவற்றை ஒழிக்க வேண்டும் என்று கூறியுள்ளாரே. அதை பேப்பரில் படிக்கவில்லையா கருணாநிதி என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேட்டுள்ளார்.
தேமுதிக கூட்டணிக்காக மீண்டும் தவம் இருக்க ஆரம்பித்துள்ளது திமுக. ஆனால் தேமுதிக தரப்பில் இதுவரை எந்த அசைவும் இருப்பதாக தெரியவில்லை. இந்த நிலையில் தேமுதிக தொடர்பாக திமுகவை தொடர்ந்து தாக்கி வருகிறார் வைகோ.

முன்பு தேமுதிக மாநாட்டில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், திமுகவை தில்லு முல்லு கட்சி என்று கடுமையாக சாடினார். இதற்கு திமுகவிலிருந்து நீக்கப்பட்ட மு.க.அழகரி உடனடியாக கண்டனம் தெரிவித்திருந்தார். பிரேமலதாவுக்கு திமுகவை விமர்சிக்க அருகதை கிடையாது என்று அவர் கூறியிருந்தார். ஆனால் திமுக தரப்பிலிருந்து இதுவரை யாரும் பிரேமலதா பேச்சைக் கண்டிக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று 2வது பகுதி தேர்தல் அறிக்கையை வெளியிட்டு தனது கேப்டன் டிவியில் விஜயகாந்த் பேசுகையில் திமுக, அதிமுகவை மக்கள் ஒழிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் கருணாநிதி தேமுதிக கூட்டணி அமையும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வைகோ மீண்டும் கருணாநிதிக்கு கேள்வி கேட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில், நேற்றுதான் திமுகவையும், அதிமுகவையும் ஊழல் கட்சிகள். இரண்டு கட்சிகளையும் மக்கள் ஒழிகக் வேண்டும் என்று விஜயகாந்த் சாடியிருந்தார். இது நாளிதழ்களிலும் செய்தியாக வந்துள்ளது. தினசரி செய்தித்தாள் படிக்கும் பழக்கம் உள்ளவர் கருணாநிதி. இந்த செய்தியை அவர் படிக்கவில்லையா என்று கேட்டுள்ளார் வைகோ.












Click it and Unblock the Notifications