“வினையை விதைத்தால் மொத்தமாக அறுவடை செய்வீர்கள்”... திமுகவுக்கு வைகோ எச்சரிக்கை
சென்னை: திமுக பொருளாளர் ஸ்டாலின் தூண்டுதலின் பேரிலேயே, மதிமுக தொண்டர்கள் மீது திமுகவினர் தாக்குதல் நடத்துவதாகவும், அதனை பொறுத்துக் கொள்ள இயலாது எனவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
சட்டசபைத் தேர்தலில் தேமுதிக - மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வரும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தொடர்ந்து பிரச்சாரக் கூட்டங்களில் திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

அந்தவகையில், பேட்டி ஒன்றில் திமுக தலைவர் கருணாநிதியை ஜாதிய ரீதியாக வைகோ விமர்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வைகோவின் இந்தப் பேச்சுக்கு அவரது கூட்டணித் தலைவர்களே எதிர்ப்பு தெரிவித்தனர். வைகோவின் இந்தப் பேச்சால் தமிழகம் முழுவதும் உள்ள திமுக தொண்டர்கள் ஆத்திரம் அடைந்தனர். மாநிலம் முழுவதும் சுமார் 500க்கும் மேற்பட்ட இடங்களில் வைகோவில் உருவப் பொம்மைகளை எரித்து அவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
அதனைத் தொடர்ந்து தனது பேச்சுக்கு கருணாநிதியிடம் மன்னிப்பு கோரி வைகோவும் அறிக்கை வெளியிட்டார்.
இதற்கிடையே, பல இடங்களில் மதிமுகவினர் மீது திமுக தொண்டர்கள் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இது திமுக பொருளாளர் ஸ்டாலின் தூண்டுதலாலேயே நடந்ததாக வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை கோயம்பேட்டியில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் அக்கட்சித் தலைவர் விஜயகாந்தை சந்தித்தபின், செய்தியாளர்கள் மத்தியில் பேசினார் வைகோ. அப்போது அவர், "ஸ்டாலின் தூண்டுதலின் பேரிலேயே மதிமுக தொண்டர்கள் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். என்னைத் தாக்கினால்கூட பொறுத்துக் கொள்வேன். ஆனால், என் தொண்டர்களைத் தாக்கினால் பொறுத்துக் கொள்ள இயலாது. வினையை விதைத்தால் மொத்தமாக அறுவடை செய்வீர்கள்" என இவ்வாறு அவர் திமுகவை எச்சரித்தார்.
விஜயகாந்துடனான இன்றைய சந்திப்பில் தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர்கள் குறித்து வைகோ ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications