மதிமுக மாவட்டச் செயலாளர் மலர்மன்னன் உடலுக்கு வைகோ கண்ணீர் அஞ்சலி
திருச்சி: திருச்சி மதிமுக மாவட்டச் செயலாளர் மலர்மன்னன் உடலுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவர் திருச்சி மலர்மன்னன். மலர்மன்னன், திருச்சி மாநகர் மாவட்ட மதிமுக செயலாளராகவும், அரசியல் ஆலோசனை குழு உறுப்பினராகவும் இருந்து வந்தார்.
அவர் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலன் இன்றி நேற்று முன்தினம் இரவு காலமானார். அவருக்கு வயது 77.
மரணம் அடைந்த மலர்மன்னன் உடலை அங்கிருந்து திருச்சி அண்ணாமலை நகரில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு, பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இன்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவரது உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார். பின்பு அவரது மனைவி ராணி, மகன்கள் அன்பு, செழியன், மகள்கள் தமிழ் செல்வி, மாலா மற்றும் அனிதா ஆகியோருக்கு வைகோ ஆறுதல் கூறினார்.
இதைத் தொடர்ந்து மலர்மன்னன் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு காந்தி மார்க்கெட் வழியாக பாலக்கரையில் உள்ள ஆர்.பி.எம்.சி. கல்லறை தோட்டத்தில், திருப்பலி நிறை வேற்றப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. பின்பு அங்கு வைகோ தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.