ராசியில்லா ராஜாவிலிருந்து ராஜ தந்திரியாக வைகோ எடுத்த விஸ்வரூபம்
சென்னை: மக்கள் நல கூட்டணிக்குள் தேமுதிக கட்சியை இழுத்து வந்து, வைகோ பெரும் ராஜதந்திர காரியங்களை நகர்த்திக் காட்டியுள்ளார். இதன்மூலம், திமுக தலைவர் கருணாநிதியிடம் ஆரம்ப காலத்தில் அரசியல் பாடம் பயின்ற வைகோ, குருவை மிஞ்சிய சிஷ்யனாக உருவாகியுள்ளார்.
நான்கு கட்சிகள் இணைந்து மக்கள் நல கூட்டணி என்ற ஒன்றை அமைத்தபோது, அது அதிமுகவின் பி-டீம் என்றுதான் திமுக அனுதாபிகளால் கிண்டலுக்கு உள்ளானது.
ஆனால், திமுகவை மட்டுமின்றி அதிமுகவையும் சகட்டு மேனிக்கு வசைமாரி பொழிந்து, மாநாடுகளை வெற்றிகரமாக நடத்தி காட்டினர் ம.ந.கூட்டணியினர்.
ஃபேஸ் வேல்யூ
என்னதான் கொள்கை, கோட்பாடு என்று கூறினாலும், தமிழக அரசியலுக்கு ஒரு முக வேல்யூ உள்ள ஆள் அவசியம் என்பதை உணர்ந்தே விஜயகாந்த்துக்கு வலை விரித்தனர்.
ஊதி பெரிதாக்கினார்
திமுக பக்கம் தேமுதிக செல்ல கூடிய சூழல் வந்தபோதெல்லாம், திமுக பற்றி பிரேமலதா வசைபாடியதை நினைவுபடுத்தி அவர்களை சேர விடாமல் செய்தார் வைகோ.
பழம் கனிந்தது
அதேநேரம், கருணாநிதியோ, விஜயகாந்த்தை பழத்தோடு ஒப்பிட்டு, பழம் கனிந்துவிட்டது. பாலில் எப்போது விழும் என்று தெரியாது என்று கூறினார். மீண்டும், ஒரு பேட்டியில் விஜயகாந்த்துடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்றும் கருணாநிதி கூறினார்.
குழப்பிவிட்டார்
இப்படி வைகோவின் அரசியல் குருநாதர், கருணாநிதி, விஜயகாந்த்துக்கு வலை விரித்த நிலையில், வைகோ அதிலும் புகுந்து ஆட்டையை குழப்பி, விஜயகாந்த்தை தங்கள் பக்கம் கூட்டி வந்துவிட்டார்.
கம்யூனிஸ்டுகளிடம்
முதல்வர் வேட்பாளரை முன்கூட்டியே அறிவிப்பதை ஒப்புக்கொள்ளாத, கம்யூனிஸ்டுகளையும் சம்மதிக்க வைத்து, விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளர் என்றும் அறிவிக்க செய்துவிட்டார் வைகோ.
சாணக்கியத்தனம்
கருணாநிதி கண்ணில் மண்ணை தூவியதோடு, கம்யூனிஸ்டுகள் மனதை கூட கரைத்து, கொள்கைகளை தளர்த்த வைத்து சந்தர்ப்ப சாணக்கியத்தனத்தை காட்டியுள்ளார் வைகோ.
வாக்கு வங்கி
மேலும், இது சாமானிய கூட்டணி என்றும் கூறிவிட முடியாது. அதிமுக, திமுகவுக்கு அடுத்தபடியாக பெரும் வாக்கு வங்கி கொண்ட கூட்டணியாக இது பார்க்கப்படுகிறது. தேர்தல் சூழ்நிலையில் வாக்கு வங்கி மேலும் அதிகரிக்ககூட வாய்ப்புள்ளதை மறுக்க முடியாது.
ராஜதந்திரி
போட்டியிட்ட பல தேர்தல்களில் அதிர்ச்சி தோல்வியடைந்ததன் மூலம், ராசியில்லா ராஜா என்று அழைக்கப்பட்டு வந்த வைகோ, இனிமேல் தன்னை ராஜதந்திரி என தைரியமாக அழைத்துக்கொள்ளலாம். ஏனெனில், அவர் வீழ்த்தியிருப்பது அரசியல் சாணக்கியரையல்லவா..