பார்வையற்றவர்களின் போராட்டத்தை காவல்துறை கொண்டு அடக்குவதா?: வைகோ

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது:
தமிழக அரசு நடத்தும் ஆசிரியர் தகுதி தேர்வில் பார்வையற்றவர்கள் ஆசிரியர்களாக தகுதிபெற குறைந்தபட்சமாக 40 சதவிகித மதிப்பெண்களை நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, பார்வையற்ற மாற்றுத்திறனாளி கல்லூரி மாணவர்களும், பட்டதாரிகளும் கடந்த 10 நாட்களுக்கு மேலாக வீதிக்கு வந்து போராடிக்கொண்டு இருக்கிறார்கள்.
அவர்களின் நியாயமான கோரிக்கையை கனிவுடன் அணுகி இருக்க வேண்டிய தமிழக அரசு, கண்டுகொள்ளாமல் பார்வையற்றவர்கள்தானே என்று அலட்சியப்படுத்தி, காவல்துறையைக் கொண்டு கடுஞ்சொல்லால் காயப்படுத்தியும், தாக்கியும் குண்டுகட்டாகத் தூக்கி அப்புறப்படுத்தி, திக்குத் தெரியாத காட்டில் விடுவதென்று முடிவெடுத்து, போராடும் பார்வையற்றவர்களை முதலமைச்சரைச் சந்திக்க வாருங்கள் என்று காவல்துறை வாகனத்தில் ஏற்றி, சென்னை புறநகர் பகுதிகளில் இறக்கிவிட்ட செயல் மிகவும் கண்டனத்திற்கு உரியதாகும்.
தொடர்ந்து அலைக்கழிக்கப்பட்டு அலட்சிப்படுத்தி அவமதித்ததால் இனி நிரந்தரத் தீர்வை தமிழக முதலமைச்சரால்தான் தர முடியும் என்ற நம்பிக்கையோடு தொடர்ந்து தங்களின் உறுதியான போராட்டத்தின் மூலமாக நிருபித்துக்கொண்டு வருகிறார்கள்.
பார்வையற்றவர்கள் ஒன்பது பேர், ஒன்பது அம்ச கோரிக்கையை வென்றெடுக்க மாற்றுத் திறனாளிகள் அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருந்து உடல்நலம் குன்றி, இராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் தொடர்ந்து உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
போராடிக்கொண்டு இருக்கும் பார்வையற்ற கல்லூரி மாணவர்கள், பட்டதாரிகளை அழைத்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து கனிவுடன் அவற்றைக் களைந்திட முதலமைச்சர் ஆவண செய்ய வேண்டும். இவர்களில் அனுபவம் வாய்ந்த, அக்கறைகொண்ட திறமையான அதிகாரிகளை ஆலோசகர்ளாக நியமித்து, அவர்களைக் கொண்டே அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து பணி நியமனம் செய்ய வேண்டும். அரசின் திட்டங்கள் பயனாளிகளுக்கு சென்றுச் சேர்கிறதா? என்பதை உறுதிப்படுத்திட வேண்டும்.
விழி இழந்தோரின் விடிவெள்ளி பார்வையற்றவர்களுக்கு வழிகாட்டிய தாரகை தன் வாழ்வில் அலை அலையாக வந்த இன்னல்களை இடுக்கண்களை எதிர்த்து நின்று போராடி வெற்றி கண்ட வீராங்கணை கெலன் கெல்லரின் தாரக மந்திரம், ‘என்னால் எல்லாவற்றையும் செய்ய முடியாவிடிலும், என்னாலும் சிலவற்றைச் செய்ய முடியும்' என்பதைப் போன்று உறுதி குலையாமல் போராடிக் கொண்டு வரும் பார்வையற்ற கல்லூரி மாணவர்கள், பட்டதாரிகள் மாற்றுத் திறனாளிகள் என்பதையும் கருணைமிக்க அணுகுமுறைக்கு உரியவர்கள் என்பதையும் மனதில்கொண்டு தமிழக அரசு, காவல்துறை அடக்குமுறையைக் கைவிட்டு பிரச்சனையை அணுக வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications