கம்யூ. தலைவர் ஆர். உமாநாத் மறைவுக்கு வைகோ இரங்கல்
சென்னை: மூத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஆர். உமாநாத் மறைவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் முன்னணித் தலைவர்களுள் ஒருவரான தோழர் உமாநாத் அவர்கள் மறைந்த செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றுத் தியாகங்கள் செய்தவர். சென்னை சதி வழக்கில் கைது செய்யப்பட்டு, ஆங்கில ஏகாதிபத்திய அரசாங்கத்தால் மூன்று ஆண்டுகள் சிறைக் கொட்டடியில் அடைக்கப்பட்டிருந்தார்.
உமாநாத் அவர்கள் தலைசிறந்த மார்க்சிய சித்தாந்தவாதியாகவும், சீரிய எழுத்தாளர், பேச்சாளராகவும் முத்திரை பதித்தவர். பொதுஉடைமை இயக்கம் முன்னேடுத்துச் சென்ற அனைத்துப் போராட்டக் களங்களிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு சிறை சென்றவர்.
நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் சிறப்பாகப் பணியாற்றி, தகுதி வாய்ந்த நாடாளுமன்றவாதியாக மிளிர்ந்தவர்.
தொழிலாளர் வர்க்கத்தின் தோன்றாத் துணைவராகவும், தொழிற்சங்க இயக்கத்தின் மாபெரும் தலைவராகவும் திகழ்ந்தவர். கட்சி எல்லைகளைக் கடந்து அனைவரிடமும் இனிமையாகப் பழகும் பண்பு நலம் கொண்டு இருந்தார்.
தோழர் திரு உமாநாத் அவர்களின் மறைவு, பொதுஉடைமை இயக்கத்திற்கும் ஜனநாயகத்திற்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து துயரில் வாடும் அவரது குடும்பத்திற்கும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சித் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, தோழர் உமாநாத் அவர்களுக்கு வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன் என்று வைகோ தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications